கோவையில் நாளை நடக்கும் பொருநை அகழ்வாராய்ச்சி மற்றும் தமிழக அரசின் ஓராண்டு சாதனை கண்காட்சி முன்னேற்பாடுகள் குறித்து அமைச்சர் சாமிநாதன் நேரில் ஆய்வு செய்தார்.
கோவை: நாளை வ.உ.சி மைதானத்தில் பொருநை அகழ்வாராய்ச்சி மற்றும் தமிழக அரசின் ஓராண்டு சாதனை ஓவிய கண்காட்சியை தமிழக முதல்வர் முக ஸ்டாலின் துவக்கி வைக்கிறார்.
இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதனை நேற்று முன்தினம் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, மாவட்ட ஆட்சியர் சமீரன், மாநகராட்சி ஆணையர், மாநகர காவல் ஆணையர் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
இன்று செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் வ.உ.சி மைதானத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஏற்பாடுகளை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
நாளை முதல்வர் வருகை தர உள்ள நிலையில் அங்கு பணிகள் எந்தளவு முடிக்கப்பட்டுள்ளது, முதல்வர் வரும் வழி, பாதுகாப்பு ஏற்பாடுகள் ஆகியவை குறித்து மாவட்ட ஆட்சியரிடமும் மாநகராட்சி ஆணையரிடமும் கேட்டறிந்தார்.