கோவை பீளமேடு கொலை வழக்கு: 9 பேர் கைது; கத்தி, சுத்தியல் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல்

கோவை பீளமேட்டில் சென்னை இளைஞர் நவீன் கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை மாநகர காவல் ஆணையரின் நேரடி மேற்பார்வையில் தனிப்படைகள் அமைத்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டதில், 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கத்தி, சுத்தியல், உருட்டுக்கட்டை உள்ளிட்ட ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.


Coimbatore: கோவை பீளமேடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட உடையாம்பாளையம் அசோக் வீதியில் சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த நவீன் (25) என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய 9 பேரை கோவை மாநகர போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட கத்தி, சுத்தியல், உருட்டுக்கட்டை உள்ளிட்ட ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்தவர் நவீன். எம்.பி.ஏ. படித்த இவர், அவ்வப்போது கோவை வந்து தனது நண்பர்களைச் சந்தித்து செல்வது வழக்கமாக இருந்தது. அதன்படி, கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு கோவை வந்த அவர், உடையாம்பாளையம் அசோக் நகரில் தங்கியிருந்த தனது நண்பர்களின் அறைக்குச் சென்று தங்கி, கோவையில் உள்ள தனியார் நிறுவனங்களில் வேலை தேடி வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், நவீனின் நண்பர்கள் இருவர் இருசக்கர வாகனத்தில் அந்தப் பகுதியில் அதிவேகமாக சென்று வந்ததை வழக்கமாகக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அதன்படி, ஆகஸ்ட் 3-ஆம் தேதி இரவு அவர்கள் இருசக்கர வாகனத்தில் வேகமாகச் சென்றபோது, அந்தப் பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் மற்றும் விக்னேஷ் ஆகியோர் அவர்களை வழிமறித்து தாக்கியதுடன், எச்சரித்து அனுப்பியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, அந்த இருவரும் நவீனிடம் நடந்த சம்பவத்தை கூறியுள்ளனர்.

பின்னர், சந்தோஷ் தனியாக அந்தப் பகுதியில் நடந்து சென்றதைப் பார்த்த நவீனும் அவரது நண்பர்களும், அவரை தங்களது அறைக்கு அழைத்துச் சென்று சரமாரியாக தாக்கியதாகத் தெரிகிறது.

இதனால் ஆத்திரமடைந்த சந்தோஷ் தனது நண்பர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து, அங்கு வந்த பூக்கார விக்னேஷ் @ விக்னேஷ், சந்தோஷ், நரி மணிகண்டன் @ மணிகண்டன், காசி @ சிவா, பீடி கோபால் @ விக்னேஷ், ரியாஸ், அர்ஜுன், சதீஷ்குமார் மற்றும் மாரிமுத்து ஆகியோர் ஆயுதங்களுடன் நவீன் தங்கியிருந்த அறைக்குச் சென்று, நவீன் உள்ளிட்ட அவரது ஐந்து நண்பர்களையும் சரமாரியாக தாக்கியுள்ளனர். பின்னர், தங்களிடம் இருந்த கத்தியால் நவீனின் நெஞ்சில் குத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

கத்திக்குத்தில் பலத்த காயமடைந்த நவீன், தான் தங்கியிருந்த அறையில் இருந்து தள்ளாடியபடி வெளியே வந்தார். பின்னர் அருகில் இருந்த ஒரு வீட்டின் முன்பு சென்று மயங்கி விழுந்த நிலையில், பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்த பீளமேடு காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, நவீனின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், காயமடைந்த மலைமாறன், சுரேஷ், ரோகித் ராஜ், ஐவின் ராஜ் மற்றும் ஆகாஷ் ஆகியோர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இந்த வழக்கில் கோவை மாநகர காவல் ஆணையரின் நேரடி மேற்பார்வையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. பல்வேறு கோணங்களில் நடத்தப்பட்ட புலனாய்வு, தொழில்நுட்ப ஆதாரங்கள் மற்றும் தொடர் கண்காணிப்பின் அடிப்படையில் சம்பவத்தில் தொடர்புடைய 9 பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து குற்றத்தில் பயன்படுத்தப்பட்ட கத்தி, சுத்தியல், உருட்டுக்கட்டை உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அனைவரும் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டனர். 78 - Press News - E2 Murder case accused arrested - 05.08.2026.pdf

கொலை போன்ற கொடூர குற்ற வழக்கில் குறுகிய காலத்திலேயே அனைத்து குற்றவாளிகளையும் கைது செய்த பீளமேடு சட்டம்-ஒழுங்கு காவல் நிலைய போலீசார் மற்றும் தனிப்படை அதிகாரிகளை கோவை மாநகர காவல் ஆணையர் பாராட்டியுள்ளார். மேலும், சட்டம்-ஒழுங்கை பாதிக்கும் எந்தவித குற்றச்செயல்களும் அனுமதிக்கப்படமாட்டாது என்றும், குற்றவாளிகள் மீது விரைவான மற்றும் உறுதியான சட்ட நடவடிக்கை தொடர்ந்து எடுக்கப்படும் என்றும் கோவை மாநகர காவல் துறை தெரிவித்துள்ளது.

Newsletter

பெரியார் 148வது பிறந்தநாள்: கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி

பெரியாரின் 148வது பிறந்தநாளை முன்னிட்டு கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி நடைபெற்றது. மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி...

கோவையில் கஞ்சா வழக்கு குற்றவாளிக்கு 5 ஆண்டு சிறை

கோவை MTP ரோடு MGR மார்க்கெட் அருகே 2019ம் ஆண்டு நடந்த கஞ்சா விற்பனை வழக்கில் இரண்டாம் எதிரி தினேஷுக்கு 5 ஆண்டுகள் சிறைத்...

Two Road Accidents Leave Pedestrian, Cyclist Injured in Coimbatore

An unidentified pedestrian, aged around 40, sustained a head injury after being hit by a motorcycle on Mettupalayam Road...

கோவையில் இரண்டு தனி விபத்துகள்: இருவருக்கு பலத்த காயம்

கோவை தடாகம் ரோடு கே.என்.ஜி புதூர் பகுதியில் சைக்கிளில் சென்ற அஸ்வின் (21) என்பவர் மீது எதிர்திசையில் வந்த கார் மோதி இடது...

கோவை பீளமேடு வார்டு 27-ல் பல்வேறு மாநகராட்சி பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதிக்குட்பட்ட மாநகராட்சி வார்டு எண் 27, பீளமேடு பகுதியில் செப்டம்பர் 17, 2026 அன்று வார்டு கவுன்சி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆனைமலை ஆழியாறு அணையில் 65.45 அடியாகவும், பொள்ளாச்சி பரம்பிக்குளம் அணையில் 5...