கோவை சிறுமுகை வனச்சரகத்தில் 8 வயதான ஆண் யானை ஒன்று இறந்த நிலையில் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து வனத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை: கோவை மாவட்டம் சிறுமுகை வனச்சரக அலுவலர் தலைமையில் தனிக்குழு பெத்திக்குட்டை பிரிவு, வரப்பள்ளம் சரகத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, வனப்பகுதியில் சுமார் 8 முதல் 11 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை ஒன்று இறந்த நிலையில் கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து, இது தொடர்பாக மாவட்ட வன அலுவலர் மற்றும் கால்நடை மருத்துவ குழுவினருக்கு தகவல் அளிக்கப்பட்டது.
இதையடுத்து, இறந்த நிலையில் கண்டறியப்பட்ட ஆண் யானைக்கு உடற்கூறு ஆய்வு செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
யானையின் இறப்புக்கு என்ன காரணம் என்பது குறித்து உடற்கூறு ஆய்வு முடிந்த பின்னரே தெரியவரும் என்று வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். கோவை வனக் கோட்டத்தில் தொடர்ந்து யானைகள் இறந்து வருவது வனத்துறையினர் மற்றும் வன ஆர்வலர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.