பொள்ளாச்சி உடுமலை சாலை ஊஞ்சவேலம்பட்டி அருகில் சாலையை கடக்க முயன்ற சரக்கு வாகனம் மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் மூதாட்டி உட்பட 2 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை: கோவை அருகே உள்ள குரும்பபாளையம் பகுதியை சேர்ந்த 5 பேர் உடுமலையில் உள்ள அவரது உறவினர் வீட்டிற்கு காரில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது பொள்ளாச்சியிலிருந்து உடுமலை சாலை ஊஞ்சவேலம்பட்டி அருகே சென்றபோது, சாலையை கடக்க முயன்ற சரக்கு வாகனம் மீது கார் மோதியது. அப்போது சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த 70 வயது மூதாட்டி மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதில் மூதாட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காரில் வந்த கோவையைச் சேர்ந்த கோதைநாயகம், மரகதவடிவு, மகாலட்சுமி, 7 வயது சிறுவன் மற்றும் காரை ஓட்டி வந்த கவியரசு ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.
அருகில் இருந்தவர்கள் காயம் அடைந்தவர்களை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் கோதைநாயகம் உயிரிழந்தார். படுகாயமடைந்த 4 பேர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது தொடர்பாக, தொடர்பாக பொள்ளாச்சி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து, உயிரிழந்த 70 வயது மூதாட்டி யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.