இடையர்பாளையம் பகுதியில் செயல்பட்டு வந்த குறுந்தொழில் கூடம் எவ்வித முன் அறிவிப்பின்றி மாநகராட்சி அதிகாரிகளால் மூடப்பட்டதை கண்டித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் TACT சங்கத்தினர் மனு கொடுத்தனர்.
கோவை: எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் குறுந்தொழில் கூடம் மாநகராட்சி அதிகாரிகள் மூடி விட்டதாகச் சிறு குறு தொழில் முனைவோர் புகார் தெரிவித்துள்ளனர்.
கோவை கவுண்டம்பாளையம்- இடையர்பாளையம் இடையே உள்ள செளடாம்பிகா நகரில் சுரேஷ் இன்ஜினியரிங் மற்றும் சதீஷ் இண்டஸ்ட்ரீஸ் கம்பெனியை எவ்வித முன்னறிவிப்பும் இன்றி மாநகராட்சி அலுவலர்கள் மூடி விட்டதாகவும், இதற்கு மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுத்து மீண்டும் அந்த கம்பெனி செயல்பட வழிவகை செய்ய வலியுறுத்தியும், சிறுகுறு தொழில் முனைவோர் சங்கம் சார்பில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.
அச்சங்கத்தின் தலைவர் ஜேம்ஸ் தலைமையில் மனு அளிக்கப்பட்டது. இதுகுறித்து பேசிய ஜேம்ஸ், கோவை மாவட்ட குறு சிறு தொழில்கள் நிறைந்த மாவட்டம், கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக இங்கு குறு சிறு தொழில்கள் நடைபெற்று வந்த நிலையில், தொடர்ந்து பல்வேறு நெருக்கடிகளை நாங்கள் சந்தித்து வருகிறோம்.
இந்நிலையில் கடந்த 21-ம் தேதியன்று கவுண்டம்பாளையம் பகுதி செளடாம்பிகா நகரில், நடைபெற்று வந்த குறுந்தொழில் கூடம் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி மாநகராட்சி அலுவலர்கள் மூடிவிட்டனர்.
இது குறித்து அப்போதே மாநகராட்சி ஆணையரைச் சந்திக்க முயன்ற போது அவர் இல்லாததால் அவரது தொலைப்பேசிக்குக் குறுஞ்செய்தி அனுப்பினோம். ஆனால் எவ்வித பதிலும் இல்லை. எனவே மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து அந்த கம்பெனியை திறக்க வழிவகை செய்ய வேண்டி வந்துள்ளோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.