சரித்திரம் கண்டிராத பஞ்சு விலை உயர்வால் தமிழக சிறு நூற்பாலைகளில் உற்பத்தி நிறுத்தத்தால் பல்லாயிரக் கணக்கான தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கோவை: பஞ்சு விலை உயர்ந்து வருவதால், பல்லாயிரக் கணக்கான தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தென்னிந்திய ஸ்பின்னர்ஸ் அசோசியேஷன் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தென்னிந்திய ஸ்பின்னர்ஸ் அசோசியேஷன் கூறியிருப்பதாவது:-
இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் பஞ்சின் விலை மிகவும் அபரிமிதமாக உயர்ந்து கொண்டே போகிறது.
30 mm பஞ்சு 356 கிலோ கொண்ட ஒரு கண்டியின் விலை சராசரியாக கடந்த ஜனவரி 2022-ல் ரூ.76,000/- இருந்த பஞ்சு, படிப்படியாக உயர்ந்து, தற்போதைய பஞ்சின் விலை சுமார் ரூ.1,05,000- ஆக சரித்திரம் கண்டிராத வகையில் உயர்ந்து கொண்டே செல்கிறது. கடந்த ஒரு மாதமாக, நூல் விற்பனை மிகவும் மந்தமாக உள்ளது.
மேலும், ஒரு கிலோவிற்கு சுமார் ரூ.25- முதல் ரூ.30/- வரை நஷ்டம் ஏற்படுகிறது. இப்பஞ்சு விலை ஏற்றத்தால், பல நூற்பாலைகள் செயற்கை இழை நூலுக்கு மாறி விட்டனர். பெருவாரியான சிறு மற்றும் நடுத்தர (SME) நூற்பாலைகளில் நடைமுறை மூலதனம் முற்றிலும் அழிக்கப்பட்டு அபாய நிலையில் உள்ளது.
ஆகவே, எங்களது பெருவாரியான உறுப்பினர்கள் தங்களது உற்பத்தியை வாரம் ஒரு நாள் / இரண்டு நாள் விடுமுறை அளித்து வருகிறார்கள். ஒரு சிலர் ஒரு ஷிப்ட், இரண்டு ஷிப்ட் ஆக குறைத்து உள்ளார்கள். இந்த நிலை தொடர்ந்து நீடித்தால், மறைமுகமாகவும், நேரடியாகவும், லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழப்பதோடு, ஒட்டுமொத்த ஜவுளி மதிப்பு தொடரில் (Textile Value Chain) உள்ள அனைத்து தொழில்களும் முடங்கும் அபாயநிலை உருவாகும்.
இந்தியாவில், பஞ்சு தட்டுப்பாடு பெரும் அளவில் நிலவி வருகிறது, தரமான பஞ்சு கிடைப்பது மிகவும் சிரமமாக உள்ளது. நாட்டின் மொத்த பருத்தி விளைச்சலில், தமிழகத்தில் தான் சுமார் 50% பஞ்சு உபயோகப் படுத்தப்படுகிறது. இப்பஞ்சு வட மாநிலங்களான குஜராத், மஹாராஷ்ட்ரா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடக, மத்திய பிரதேசம், ஒடிசா, பஞ்சாப் போன்ற மாநிலங்களிலிருந்து தான் தமிழக நூற்பாலைகள் கொள்முதல் செய்கின்றது.
நம் நாட்டில் உற்பத்தியாகும் பருத்தியின் விளைச்சலை துள்ளியமாக அளவிட முடியாமல் உள்ளது. மத்திய அரசாங்கத்திடமோ, தனியாரிடமோ எவ்வித புள்ளி விவரமும் இல்லை. இதுவே நம்மிடம் அடிப்படையே தவறாக உள்ளது. இந்தியாவில் பருத்தி விளைச்சலை உலக நாடுகளுக்கு இணையாக அதிகரிக்க வேளாண்துறை ஆவண செய்ய வேண்டும்.
கீழ்கண்ட கோரிக்கைகளை மத்திய, மாநில அரசாங்கம் உடனடியாக போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
1. நாட்டின் பஞ்சு தட்டுப்பாட்டிற்க்கு அடிப்படை காரணம், நம் நாட்டில் உற்பத்தியாகும் பருத்தியின் விளைச்சளின் புள்ளி விவரம் இல்லாததே. ஆகவே அனைத்து தரப்பினரும் விவசாயி, பருத்தி ஜின்னிங், ப்பிரசிங் போன்றவர்களிடமிருந்து, யார் யாருக்கு பஞ்சு விற்பனை செய்யப்படுகிறது, கையிருப்பின் பஞ்சு அளவு போன்றவற்றை துள்ளியமான புள்ளி விவரம் சேகரிக்க மத்திய, மாநில அரசும் மற்றும் வேளாண் துறைகளும் இணைந்து புதிய உக்திகளையும், வழிமுறைகளையும், உடனடியாக கண்டுபிடிக்க வேண்டும்.
2. மத்திய ஜவுளித்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும், பஞ்சு ஆலோசனைக் குழு (Cotton Advisory Board - CAB) ஒவ்வொரு ஆண்டும் பருத்தியின் வரத்தை கணக்கீடும் போது, நம் நாட்டுக்கு தேவையான பஞ்சு போக மீதமுள்ள பஞ்சை ஏற்றுமதி செய்யலாம் என கணக்கிடும். ஆனால், ஒவ்வொரு ஆண்டும், நம் நாட்டுக்கு தேவையான பஞ்சு வரத்து வருவதற்கு முன்பே, பஞ்சை ஏற்றுமதி செய்து விடுகிறார்கள். ஆகவே, நம் நாட்டுக்கு தேவையான பஞ்சினை கணக்கிட்டு பருத்தி சீசன் முடிவடைந்த பிறகு, உற்பத்தியை கணக்கிட்டு நம் நாட்டுக்கு பஞ்சு தேவை போக மீதமுள்ள பஞ்சை ஏற்றுமதி செய்ய அனுமதிக்க வேண்டும்.
3. மத்திய அரசாங்கம் பஞ்சின் மீது விதிக்கப்பட்ட இறக்குமதியின் வரியை 30 செப்டம்பர் 2022 வரைக்கும் ரத்து செய்ததை எங்களது சங்கம் மனமார்ந்த நன்றியை தெரிவிக்கிறது. அதேசமயம், நூற்பு தொழிலில் ஒரு சம நிலை ஏற்ப்படுத்த, மத்திய அரசாங்கம் பஞ்சின் மீது விதிக்கப்பட்ட இறக்குமதியின் வரியை நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும்.
4. Multi Commodity Exchange of India Limited (MCX) and National Commodity & Derivatives Exchange Limited (NCDEX) போன்ற பஞ்சு வர்த்தகத்தை (யூக வணிகத்தை) முற்றிலுமாக தடை செய்ய வேண்டும்.
5. இந்தியப் பருத்திக் கழகம் (Cotton Corporation of india -CCI) குறைந்தபட்ச ஆதரவு விலையிலோ (Minimum Support Price - MSP) அல்லது அதற்க்கு மேல் நியாயமான சந்தை விலையிலோ, தரமான பஞ்சை கொள்முதல் செய்து, நியாயமான விலையில் நேரடியாக நூற்பாலைகளுக்கு பஞ்சு விநியோகம் செய்ய வேண்டும். மேலும், பன்னாட்டு நிறுவனங்களுக்குகோ, பெரிய வணிகர்களுக்குகோ பஞ்சை விற்பனை செய்ய கூடாது.
6. ஜவுளித் துறையை பாதுகாப்பதற்காக, இந்தியாவில் குறைந்தபட்ச பஞ்சு இருப்பை (Buffer Stock) பராமரிக்க மத்திய அரசாங்கம் ஆவண செய்ய வேண்டும்.
7. நம் நாட்டின் மிகப் பெரிய தொழிலான, நூற்புத்தொழின் மூலப்பொருளான பருத்தி இயற்கையான விளை பொருள். நம் நாட்டில் பருத்தி விளைச்சல் உலக சந்தையை ஒப்பிடும் போது, நம் நாட்டின் பஞ்சு உற்பத்தி மிகவும் குறைந்து காணப்படுகிறது. மத்திய வேளாண் துறைகள் தீவிர முயற்சி செய்து நம் நாட்டிற்க்கு தேவையான பருத்தி விளைச்சல் முறை, பருத்தி விநியோக முறை மற்றும் ஜவுளித் தொழிலுக்கு தரமான பருத்தி கிடைப்பதை கண்டறிந்து, புதிய விநியோக முறைக்கு அனுபவம் கொண்ட புதிய வாரியம் உருவாக்கப்பட வேண்டும். மேலும், மத்திய, மாநில அரசு புதியரக பருத்தி விதைகளை அறிமுகப்படுத்தி, பருத்தி உற்பத்தியை அதிகரித்து, பல புதிய உக்திகளை கையாண்டு, விவசாய வாழ்வாதாரங்களை காப்பாற்ற போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும், மத்திய அரசு விதை மேம்பாடு மற்றும் பயிர் ஆராய்ச்சிக்கு அதிகநிதி ஒதுக்கி தரவேண்டும்.
8. தமிழக நூற்பாலைகளுக்கு தேவையான மூலப்பொருளான பருத்தி தமிழகத்தில் 5% உற்பத்தி செய்யப்படுகிறது. ஆகவே, தமிழ்நாடு வேளாண்துறை தமிழகத்தில் பருத்தி சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு வீரிய ரக பருத்தி விதைகளை அறிமுகப்படுத்தி, பரப்பளவையும் அதிகப்படுத்தி, பருத்தி உற்பத்தியை அதிகரிக்க புதிய உக்திகளை கையாள வேண்டும்.
இவ்வாறு தென்னிந்திய ஸ்பின்னர்ஸ் அசோசியேஷன் கூறியுள்ளது.