கோவையில் ஊரடங்கு காலத்தில் கொரோனா வழிகாட்டி நெறிமுறைகளை மீறியதாக பதிவு செய்யப்பட்ட 31,076-வழக்குகளை ரத்து செய்து உள்துறை செயலாளர் பிரபாகர் உத்தரவிட்டுள்ளார்.
கோவை: கோவையில் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாட்டை மீறியதாக பதிவான வழக்குகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்த காரணத்தால் கடந்த 20.1.2020-ம் ஆண்டு முதல் 17.5.2022-ம் ஆண்டு வரை முழு ஊரடங்கு நடைமுறையில் இருந்தது. நோய்த் தொற்றை தடுக்கும் வகையில் தமிழகம் முழுவதும் காவல் துறை அரசு உத்தரவுப்படி முழு ஊரடங்கை அமல்படுத்தி இருந்தனர்.
மேலும், அத்தியாவசிய தேவையின்றி பொதுமக்கள் யாரும் வெளியே வரவேண்டாம் என்றும் உத்தரவிடப்பட்டிருந்தது. அந்த உத்தரவை மீறி நோய் தொற்றை பரப்பும் வகையில், வெளியே சுற்றியதாக சென்னை, கோவைஉட்பட மாநிலம் முழுவதும் மாவட்ட வாரியாக பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.
அதேபோல் இ-பாஸ் நடைமுறையில் இருந்த போது, அதை போலியாக தயாரித்து வெளியே சுற்றிய நபர்கள் மீதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. அந்த வகையில், மாநிலம் முழுவதும் 10-லட்சம் வழக்குகள் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மீது பதிவு செய்யப்பட்டது.
அதில் கொரோனா ஊரடங்கு காலத்தில் காவல்துறை சார்பில் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் அனைத்தும் ரத்து செய்யப்படும் என்று கடந்த பிப்ரவரி 19-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்தார்.
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து தமிழக உள்துறை செயலாளர் பிரபாகர் அனைத்து மண்டல ஐஜிக்கள், காவல் ஆணையர்கள், மாவட்ட கண்காணிப்பாளர்களுக்கு அவசர சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.
அதில், ‘கொரோனா ஊரடங்கு காலத்தில், ஊரடங்கு உத்தரவை மீறியவர்கள், வதந்தி பரப்பியவர்கள், உண்மைக்கு மாறான செய்திகளை பரப்பியவர்கள் ஆகியோர்கள் மீது சுமார் 10- லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இதில், வன்முறையில் ஈடுபட்டு குறிப்பிட்ட குற்றங்களுக்காக பதிவு செய்யப்பட்ட வழக்குகள், முறைகேடான வழிகளில் இ-பாஸ் பெற்று பயன்படுத்தியது மற்றும் காவல் துறையினரைப் பணி செய்ய விடாமல் தடுத்தது தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகள் போன்றவற்றைத் தவிர மற்ற அனைத்து வழக்குகளும் பொதுமக்களின் நலன் கருதி கைவிடப்படுகிறது’.
அந்த வகையில் சென்னை உட்பட மாநிலம் முழுவதும் 8-லட்சத்து 98-ஆயிரத்து 948-வழக்குகள் பொதுமக்கள் நலன் கருதி ரத்து செய்யப்படுகிறது. அதற்கான நடவடிக்கையில் அந்தந்த ஐ ஜிக்கள், காவல் ஆணையர்கள், மாவட்ட கண்காணிப்பார்கள் எடுக்க வேண்டும் என்று அறிவித்துள்ளார்.
அதில், கோவை நகரில் மட்டும் 8,089-வழக்குகள், புறநகர்ப் பகுதிகளில் 22,987-வழக்குகள் என மொத்தம் 31,076-வழக்குகள் ரத்து செய்யப்படுகிறது. இதற்கான உத்தரவு நகல்கள் மேற்கு மண்டல ஐஜி மற்றும் மாநகர காவல் ஆணையாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.