நாங்கள் இந்தியை எதிர்க்கவில்லை. இந்தி திணிப்பை தான் எதிர்க்கிறோம். ஆங்கிலம் சர்வதேச மொழி. தமிழ் உள்ளூர் மொழி. உலகத்தோடு உரையாட ஆங்கிலமும், எங்களுக்குள் உரையாட தமிழும் போதும் என்கிற போது இந்தி எதற்கு..?
கோவை: கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் 37 வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்று வருகிறது.
தமிழ்நாடு ஆளுநர் ஆர். என்.ரவி தலைமையில் நடைபெற்ற விழாவில், தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி, முன்னாள் இஸ்ரோ தலைவர் க.சிவன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
இந்நிகழ்வில் ஆளுநர் முன்னிலையில் தமிழ்நாடு உயர்கல்வி துறை அமைச்சர் க.பொன்முடி பேசும் போது, "கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்றார் பாரதியார். ஆளுநர் பாரதியாரை அடிக்கடி மேற்கோள் காட்டுவார். தமிழ்நாட்டின் வளர்ச்சியையும் உயர்கல்வியையும் ஆளுநர் புகழ்வார். உயர்கல்வியில் 53% மாணவர் சேர்க்கையுடன் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது. இது தான் திராவிட மாடல்.
சிவன் மற்றும் நானுமே தமிழ் வழியில் தான் படித்தோம். தமிழ் மொழியில் படித்து தான் இந்திய அளவில் சிவன் உயர்ந்துள்ளார். நான் முனைவர் பட்டம் வரை பெற்று இன்று அமைச்சராக உள்ளேன்.
ஆளுநரே, நாங்கள் எந்த மொழிக்கும் குறிப்பாக இந்தி மொழிக்கும் எதிரானவர்கள் அல்ல. மொழி கற்பது வாய்ப்பாக தான் இருக்க வேண்டுமே தவிர கட்டாயமாக இருக்கக்கூடாது.
நாங்கள் இந்தியை எதிர்க்கவில்லை. இந்தி திணிப்பை தான் எதிர்க்கிறோம். ஆங்கிலம் சர்வதேச மொழி. தமிழ் உள்ளூர் மொழி. உலகத்தோடு உரையாட ஆங்கிலமும், எங்களுக்குள் உரையாட தமிழும் போதும் என்கிற போது இந்தி எதற்கு..?
இரண்டு மொழிகள் போதுமானது. மூன்றாவது மொழி படிப்பது விருப்பமாக தான் இருக்க வேண்டும். அண்ணாவிடம், மொழி கொள்கை தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்ட போது பூனைக்கு தனி வழி, எலிக்கு தனி வழி என்றார். உலகத்தோடு உரையாடும் ஆங்கிலத்திலே நாங்கள் மற்ற மாநிலங்களுடன் உரையாடலாம். இந்தி மொழி படித்தால் வேலை கிடைக்கும் என்கிறார்கள். ஆனால், நம் ஊரில் பானி பூரி விற்பவர்கள் இந்தி பேசுபவர்களாக தான் இருக்கிறார்கள்.
புதிய கல்வி கொள்கையில் உள்ள நல்ல அம்சங்களை நாங்கள் ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறோம். ஆனால், மும்மொழி கொள்கையை ஏற்றுக் கொள்ள முடியாது. தமிழ்நாட்டிற்கு என தனி கல்வி கொள்கையும் மொழி கொள்கையும் இருக்க வேண்டும். அதற்காக தான் தமிழ்நாடு மாநில கல்வி கொள்கையை வகுக்க குழு அமைத்துள்ளார் முதல்வர். மாநில அரசின் குரலாக இதை நான் இங்கு பதிவு செய்கிறேன். ஆளுநர் மாநிலத்தின் உணர்வுகளையும் மாணவர்களின் உணர்வுகளையும் புரிந்து கொள்வார், என நம்புகிறேன்.
தமிழ், ஆங்கிலம் தான் இங்கு கட்டாயம். இந்தி இங்கு கட்டாயம் இல்லை. மூன்றாவது மொழியாக மலையாளம், கன்னடம் என எது வேண்டுமானாலும் கற்றுக் கொள்ளலாம். அதற்கான, வாய்ப்புகளை தான் நாம் உருவாக்கி தர வேண்டும். ஆனால், இந்தி மொழியை தான் படிக்க வேண்டும் என திணிக்கக்கூடாது.
கல்வியில் ஏற்ற தாழ்வு இருக்கக்கூடாது என்பதற்காக தான் அரசு பள்ளி மாணவர்களுக்கு பொறியியல் மற்றும் தொழில் படிப்புகளிலும் 7.5% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.
ஆளுநர் தமிழ்நாட்டின் உணர்வுகளை புரிந்து கொண்டு எங்களுக்கு உதவுவார் என நம்புகிறேன். மாநிலத்தின் உணர்வுகளை ஒன்றிய அரசிடம் தெரிவிக்க வேண்டும்", இவ்வாறு அமைச்சர் பொன்முடி பேசினார்.