கடந்த 3-நாட்களாக கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, வெளிநாட்டு பெண் என்பதால் சென்னை புழல் சிறைக்கு அனுப்பி வைக்க வாய்ப்பு உள்ளது.
கோவை: கோவை விமான நிலையத்தில் சினிமா பட பாணியில் 41-போதை மாத்திரைகளை விழுங்கி கடத்தி வந்த உகாண்டா நாட்டு பெண் கைது செய்யப்பட்டு, மருத்துவமனை சிகிச்சைக்கு பின் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார்.
வளைகுடா நாடான ஷார்ஜா- கோவை இடையே ஏர் அரேபியா விமானம் இயக்கப்படுகிறது. இந்த விமானம் கடந்த 4-நாட்களுக்கு முன் சார்ஜாவில் இருந்து கோவை விமான நிலையத்துக்கு வந்தது.
அதில் வந்த பயணிகளை மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது உகாண்டா நாட்டில் இருந்து வந்த சாண்ட்ரா நன்டேஷா (30) என்ற பெண்ணின் நடவடிக்கையில் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.
உடனே அந்த பெண்ணிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். இதையடுத்து அந்த பெண்ணை தனியாக அழைத்துச் சென்று சோதனை நடத்தப்பட்டது.
இதில், அந்த பெண் ஏதோ மர்ம பொருளை விழுங்கி வயிற்றுக்குள் வைத்து கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து, உகாண்டா நாட்டு பெண்ணை மத்திய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இதையடுத்து, அங்கு அந்த பெண்ணை மருத்துவர்கள் சோதனை செய்தனர். அப்போது அந்த பெண்ணின் வயிற்றுக்குள் மாத்திரைகள் இருப்பது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து அந்த பெண்ணின் வயிற்றுக்குள் இருந்த 41-மாத்திரைகள் வெளியே எடுக்கப்பட்டது.
அவற்றை ஆய்வு செய்த போது, அதிக விலை கொண்ட போதை பொருட்கள் என்பதும், இந்த பெண், போதைப்பொருட்களை மாத்திரை வடிவில் ஆக்கி விழுங்கி வயிற்றுக்குள் மறைத்து கடத்தி வந்தது தெரியவந்தது.
இதையடுத்து, அந்த பெண்ணிற்குக் கடந்த 3-நாட்களாக கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, வெளிநாட்டு பெண் என்பதால் சென்னை புழல் சிறைக்கு அனுப்பி வைக்க வாய்ப்பு உள்ளது.