கேரளாவில் பரவி வரும் தக்காளி காய்ச்சல் எதிரொலியாக தமிழக -கேரளா எல்லையான வாளையாறு சோதனை சாவடியில் சுகாதாரத் துறை அதிகாரிகள் வாகனங்களை நிறுத்தி, காய்ச்சல் பரிசோதனை செய்து வருகின்றனர்.
கோவை: கேரளாவில் குழந்தைகளிடம் தக்காளி வைரஸ் காய்ச்சல் பரவுவதை தொடர்ந்து கோவை - கேரளா எல்லையில் சோதனைச் சாவடி அமைத்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
கேரளாவில் பரவி வரும் தக்காளி காய்ச்சலுக்கு இதுவரை 85-குழந்தைகள் பாதிக்கப்பட்டு உள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை குறி வைத்துத் தாக்கும் இந்த காய்ச்சல் பாதிப்பு காரணமாகசருமத்தில் சிவப்பு திட்டுக்கள் ஏற்படுவதால் இது தக்காளி காய்ச்சல் என அழைக்கப்படுகிறது. அதிக பாதிப்பு காரணமாக கொல்லம் மாவட்டத்தில் அங்கன்வாடி மையங்கள் மூடப்பட்டுள்ளன.
கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் தமிழக - கேரளா எல்லையோர மாவட்டங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்த தமிழக சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
அதன் அடிப்படையில் வாளையாறு, வேலந்தாவளம், மாங்கரை உள்ளிட்ட 13-சோதனைச் சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
வாளையாறு வழியாக கோவை வரும் பொதுமக்களுக்கு தெர்மல் ஸ்கேனர் மூலம் காய்ச்சல் பரிசோதனை செய்த பின்னரே மாவட்டத்தில் வர அனுமதி வழங்கப்படுகிறது.
அதே போல் கோவை மாவட்ட எல்லையில் அமைந்துள்ள அங்கன்வாடி மையங்கள் மூடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.