ஜவுளி தொழிலை பாதுகாக்க கோரி மே 17-ல் திருப்பூரில் உண்ணாவிரதம்: மார்க்சிஸ்ட் கட்சி முடிவு..!

நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த, தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் ஒன்றிய அரசு எடுக்க வலியுறுத்தி மே 17-ஆம் தேதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படுகிறது.



திருப்பூர்: ஜவுளி உற்பத்தி தொழிலை நிலைகுலைய வைத்திருக்கும் நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த, தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் ஒன்றிய அரசு எடுக்க வலியுறுத்தி மே 17-ஆம் தேதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படுகிறது.

திருப்பூரில் திங்கட்கிழமை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் கே.காமராஜ் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-



இந்தியாவில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக அதிக வேலைவாய்ப்பு தரக்கூடியது ஜவுளித் துறை ஆகும். தற்போது இந்த துறை மிகப்பெரிய நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது.

பனியன், விசைத்தறி, கைத்தறி என மொத்த ஜவுளி உற்பத்தி தொழிலை நம்பி தமிழ்நாட்டில் 25 லட்சம் குடும்பங்களைச் சேர்ந்த ஒரு கோடிப் பேர் வாழ்ந்து வருகின்றனர்.

பஞ்சு, நூல் ஆகியவற்றின் விலை கடுமையாக உயர்ந்து இந்த தொழிலை நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கிறது. திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத்தில் ஞாயிற்றுக்கிழமை இந்த மண்டலத்தைச் சேர்ந்த 5-நாடாளுமன்ற உறுப்பினர்களை அழைத்து, அனைத்து ஜவுளி தொழில் துறையினர் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டத்தை நடத்தி உள்ளனர்.

இக்கூட்டத்தில் மே 16, 17 ஆகிய இரண்டு நாட்கள் முழுமையான வேலை நிறுத்தம் நடத்துவது, ஜவுளி தொழில் சார்ந்த அனைவரும் இதில் ஈடுபட வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளனர்.

2020-ஆம் ஆண்டு வரை ஒரு கேண்டி பஞ்சு விலை ரகங்களுக்கு ஏற்றவாறு ரூபாய் 35-ஆயிரம் முதல் 45-ஆயிரம் வரை இருந்தது. ஆனால் இப்போது ஒரு கேண்டி விலை ரூபாய் 95-ஆயிரம் முதல் 1-லட்சத்து 5-ஆயிரம் வரை உயர்ந்திருக்கிறது. இதன் விளைவாக நூல் விலையும் உயர்ந்துள்ளது. ஒன்றிய அரசு எடுத்த நிலைப்பாடுதான் இந்த விலை உயர்வுக்கு முக்கிய காரணம்.

இந்திய பருத்தி கழகம் (சிசிஐ) மூலம் விவசாயிகளிடம் கட்டுப்படியான விலையில் பருத்தியை கொள்முதல் செய்து அதை உரிய விலையில் தொழில் துறையினருக்கு வழங்க வேண்டும். ஆனால் 2021-ஆம் ஆண்டு இந்திய பருத்தி கழகம் விவசாயிகளிடம் கொள்முதல் செய்ய வேண்டாம் என்று ஒன்றிய அரசு தடுத்து விட்டது.

இதன் விளைவாக பன்னாட்டு கார்ப்பரேட் மற்றும் இந்திய பெருமுதலாளிகள், ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் பஞ்சு கொள்முதல் செய்து பதுக்கி வைத்து செயற்கையாக பற்றாக்குறையை உருவாக்கி விட்டனர்.

எனவேதான் பஞ்சு விலை இந்த அளவுக்கு உயர்ந்தது. 2020-ஆம் ஆண்டு 40-நம்பர் நூல் ஒரு கிலோ ரூ.270-க்கு விற்பனையானது, தற்போது ஏறத்தாழ இரண்டு மடங்கு உயர்ந்து கிலோ ரூபாய் 470-க்கு விற்பனை ஆகிறது. பனியன் தொழில் மிகப் பெரிய நெருக்கடிக்கு இது காரணமாக உள்ளது.

வெளிநாட்டிலிருந்து பின்னல் ஆடை ஆர்டர் வரும்போது அப்போது உள்ள நூல் விலைக்கு ஏற்ப ஆடை விலையை நிர்ணயித்து அதை பெறுகின்றனர். ஆர்டர் பெற்ற பிறகு நூல் விலை கடுமையாக உயர்வதால் சிறு, குறு, நடுத்தர உற்பத்தியாளர்கள் அந்த வெளிநாட்டு பின்னலாடை ஆர்டரை செய்ய முடியாமல் நெருக்கடிக்குள் தள்ளப்படுகின்றனர்.

எனவே ஒன்றிய அரசு ஏற்கனவே உள்ள நடைமுறைப்படி சிசிஐ இந்திய பருத்தி கழகம் மூலம் விவசாயிகளிடம் பருத்தியை கட்டுப்படியான விலையில் கொள்முதல் செய்து, வருடம் முழுவதும் பஞ்சாலைகளுக்குச் சரியான விலையில் பஞ்சு தட்டுப்பாடு இல்லாமல் கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

உள்நாட்டுத் தேவை போக எஞ்சிய பஞ்சை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யலாம். இந்தியாவில் ஆண்டுக்கு 3.60 லட்சம் பேல் பருத்தி உற்பத்தி ஆகிறது. உள்நாட்டுத் தேவை 2.90 லட்சம் பேல் மட்டுமே.

எனவே பஞ்சு செயற்கை தட்டுப்பாட்டை ஏற்படுத்தும் ஆன்லைன் வர்த்தகத்தை தடை செய்ய வேண்டும். பஞ்சு, நூல் ஏற்றுமதிக்கு தடை விதிக்க வேண்டும். அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தில் பஞ்சு, நூலை சேர்க்க வேண்டும். நூற்பாலைகள் மே மாதம் கிலோவுக்கு ரூ.40 விலை உயர்வை கைவிட வேண்டும்.

அத்துடன் இந்தியாவில் தமிழகத்தின் நூல் உற்பத்தி 40 சதவீதமாக இருக்கிறது. இங்கு ஆண்டுக்கு பஞ்சு தேவை 116 லட்சம் பேல். ஆனால் தமிழகத்தில் பருத்தி உற்பத்தி 6 லட்சம் பேல் மட்டுமே. எனவே தமிழகத்தில் 25 லட்சம் குடும்பங்களைச் சேர்ந்த 1 கோடிப் பேர் வாழ்வாதாரம் பாதுகாக்க, பருத்தி கொள்முதல் செய்ய, தமிழ்நாடு பருத்தித் கழகம் என்ற தனி நிறுவனத்தை மாநில அரசு ஏற்படுத்த வேண்டும். அதற்கு அரசு வங்கி கடன் வழங்க வேண்டும்.

இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி மே 17ஆம் தேதி காலை முதல் மாலை வரை ஒரு நாள், திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு, ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்கும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முடிவு செய்துள்ளது.

உற்பத்தியாளர் சங்க நிர்வாகிகளை இப் போராட்டத்தில் கலந்து கொண்டு பேசவும் அழைப்பு விடுக்கிறோம். அத்துடன் அனைத்து ஜவுளி உற்பத்தியாளர் அமைப்புகள் நடத்தும் மே 16, 17 தேதிகள் இரு நாட்கள் வேலை நிறுத்தப் போராட்டம் வெற்றி பெறவும் மார்க்சிஸ்ட் கட்சி ஆதரவு தெரிவிக்கிறது. இவ்வாறு கே.காமராஜ் கூறினார்.

இந்த பேட்டியின்போது, மாவட்டச் செயலாளர் செ.முத்துக்கண்ணன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சி.மூர்த்தி, கே.ரங்கராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.

Newsletter

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...

மருதமலை கோயில் உண்டியலில் ₹76.25 லட்சம் காணிக்கை

கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் ரூ.76.25 லட்சம், தங்கம், வெள்ளி மற்றும் பித்தளை...

கோவை பீளமேடு கொலை வழக்கு: 9 பேர் கைது; கத்தி, சுத்தியல் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல்

கோவை பீளமேட்டில் சென்னை இளைஞர் நவீன் கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை மாநகர காவல் ஆணையரின் நேரடி மேற்பார்வையில் தனிப்படைக...

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...