மேலும், தமிழ்நாடு அரசு எந்த காரணத்தைக் கொண்டும் மீண்டும் மணல் குவாரிகளை துவங்க அனுமதிக்கக் கூடாது என கிருஷ்ணசாமி தெரிவித்தார்.
கோவை: டெல்லி அணிவகுப்பில் எந்த தீம் தமிழக அரசால் அனுப்பப்பட்டது என்பது குறித்து மக்களுக்கு விளக்க வேண்டும் என்று புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி வலியுறுத்தி உள்ளார்.
புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி கோவையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில், குடியரசு தின விழாவில் டெல்லியில் அணிவகுப்பு நடைபெறும். சுதந்திரப் போராட்ட தியாகிகளை முன்னிலைப்படுத்தும் வகையிலும் தியாகங்களை எடுத்துச் செல்லும் வகையிலும் ஊர்திகள் அணிவகுப்பு நடைபெறும்.
ஆனால், இந்த ஆண்டு நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பில் தமிழ்நாட்டிலிருந்து சுதந்திரத்துக்காக போராடிய தியாகிகளுடைய ஊர்திகள் இடம்பெறவில்லை. அதுபோல் மேற்கு வங்காளத்தில் சுபாஷ் சந்திரபோஸ் ரவீந்திரநாத் தாகூர் ஆகியோருடைய வரலாறுகள் தாங்கிய ஊர்திகள் இடம்பெறவில்லை.
கேரளா ஊர்தியில் நாராயண குரு வரலாறு இடம்பெறவில்லை. இந்திய தேசத்தின் ஒற்றுமையை ஒரு ஜனநாயக குடியரசு என்பதை எடுத்துரைக்கும் வகையில் அகில உலக அளவில் எல்லோரும் பார்க்கக் கூடிய வகையில் இந்த நிகழ்வில் மாநில அரசு குறுகிய சிந்தனை கூடாது.
சுபாஷ் சந்திரபோஸ் உள்ளிட்ட தமிழக சுதந்திர போராட்ட வீரர் புறக்கணிப்பதாக குறுகிய கண்ணோட்டத்துடன் பார்ப்பது நியாயமில்லை. முதலில் 2018 முதல் 2021 ஆம் ஆண்டு வரை தமிழகத்தில் சேர்ந்த ஊர்திகள் இடம்பெற்றது. இம்முறை நிராகரிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தைச் சேர்ந்த சிதம்பரனார், வேலுநாச்சியார் சுதந்திரத்துக்காக போராடியவர்கள் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அதே சமயத்தில் மூன்று முறை இந்த ஆய்வுக்கு அனுப்பப்பட்டதில் எம்மாதிரியான ஊர்திகள் இடம்பெறுவது? என்ன அம்சங்கள் பிரதான படுத்த வேண்டும் என்பது குறித்து ஆராய ஒரு கமிட்டி உள்ளது.
தமிழ்நாட்டு ஊர்தி மூன்று முறை ஆய்வு செய்யப்பட்டு நிராகரிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு எந்த தீம்மை கொடுத்தீர்கள் எனக் கூறவேண்டும். தமிழ்நாடு புறக்கணிக்கப்படுகிறது என கூறாமல் நாம் என்ன குறை செய்துள்ளோம் என்பதை ஆராய வேண்டும். அந்த விதத்தில் தமிழ்நாட்டில் என்ன தவறு செய்தோம் என்பதை வெளியிட வேண்டும். தமிழ்நாடு அரசு கொடுத்த காட்சிகள் எப்படி இருந்தது என்பதை நாட்டு மக்களுக்கு தெளிவு படுத்தாமல் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டுள்ளது என கூறுவது முறையல்ல. இதை மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜி அரசியலாக்கப் பார்க்கிறார் இது தவறான செயலாகும்.
தமிழ்நாடு அரசு மூன்று முறை என்ன சித்திரம் கொடுத்தீர்கள் என்பதை விளக்க வேண்டும். பாரதியார் சிறப்பு என்ன, வ உ சி யின் சிறப்பு என்ன, மருது பாண்டியர் சிறப்பு என்ன, அதை காட்சி சரியான முறை பின்பற்றப்பட்டதா என்பதே என்னுடைய கேள்வி. அதை தமிழக மக்களுக்கும் தெரிவிக்க வேண்டும் என்றார்.
தமிழகத்தில் மீண்டும் ஆற்று மணல் விற்பனை என்பது அனுமதிக்கக் கூடாது. எம் சாண்டு மணல் தற்போது புழக்கத்தில் உள்ளது. தமிழகத்தின் நீர் ஆதாரமாக உள்ள காவிரி, தாமிரபரணி உள்ளிட்ட ஆறுகளில் எந்த ஒரு நடைமுறையும் கடைபிடிக்காமல் பொக்லைன் எந்திரம் மூலம் மண் எடுக்கப்பட்டதால் ஆறுகள் வறண்டு போயுள்ளன. எடப்பாடி பழனிச்சாமி அரசு ஆற்று மணல் விற்பனையை தடை செய்தது. ஆற்று மணலில் சில பேர் கோடிகோடியாக சம்பாதித்தனர். இந்த மணலை தமிழக மக்களுக்கு மட்டும் பயன் படுத்தப்படவில்லை. அண்டை மாநிலங்களுக்கும் மாலத்தீவுக்கும் கடத்தப்பட்டது. இயற்கை வளத்தை கொள்ளையடிப்பது அண்டை மாநிலங்களுக்கும் மாலதீவுக்கு கடத்துவதற்கு தான் பயன்படுகிறது. தமிழக மக்களுக்குப் பயன்படாது.
எனவே, தமிழ்நாடு அரசு எந்த காரணத்தைக் கொண்டும் மீண்டும் மணல் குவாரிகளை துவங்க அனுமதிக்கக் கூடாது என தெரிவித்தார்.