மேலும், மூலப்பொருட்கள் விலைகளை கட்டுப்படுத்தி, ஜவுளித்துறையை பாதுகாக்கக் கோரி ‘நிட்மா’ சங்க அலுவலகத்தில் துவங்கி திருப்பூர் ரயில் நிலையம் வரை ஊர்வலம் நடைபெறுகிறது.
திருப்பூர்: திருப்பூரில் பஞ்சு மற்றும் நூல் விலை உயர்வை கண்டித்து நாளை ரயில் மறியல் போராட்டம் நடத்த இருப்பதாக பனியன் துணி உற்பத்தியாளர் சங்கம் அறிவித்துள்ளது.
திருப்பூர் பனியன் துணி உற்பத்தியாளர் சங்க (நிட்மா) அவசர ஆலோசனை கூட்டம் வாலிபாளையத்தில் நடந்தது. பருத்தி, பஞ்சு உட்பட மூலப்பொருட்கள் விலைகளை கட்டுப்படுத்தி, ஜவுளித்துறையை பாதுகாக்கக் கோரி நாளை ‘நிட்மா’ சங்க அலுவலகத்தில் துவங்கி திருப்பூர் ரயில் நிலையம் வரை ஊர்வலம் நடத்தப்படும் எனவும் காலை 10 மணிக்கு, தொழில் அமைப்பினர் இணைந்து ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதுகுறித்து அச்சங்கத்தின் தலைவர் ரத்தினசாமி செய்தியாளரிடம் பேசும்போது, பஞ்சு மற்றும் நூல் விலை உயர்வை கண்டித்து திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம் சார்பில் இன்றும் நாளையும் திருப்பூரில் உற்பத்தி நிறுத்த போராட்டம் அறிவித்து நடைபெற்று வருகிறது. இதற்கு நிட்மா சங்கம் முழு ஆதரவு அளிக்கிறது.
மூலப்பொருள் விலையேற்றத்தால் உள்நாட்டு, ஏற்றுமதி ஆடை உற்பத்தி நிறுவனங்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், பஞ்சு, நூல் விலையை கட்டுப்படுத்தி ஜவுளித்துறையை பாதுகாக்க வேண்டும் என மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் நாளைய தினம் ரயில் மறியல் போராட்டம் நடத்த இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.