முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது மேற்கு மண்டல காவல்துறைத் தலைவர் அலுவலகத்தில் அதிமுகவின் முன்னாள் செய்தித் தொடர்பாளர் புகழேந்தி புகார் மனு அளித்தார்.
கோவை: அதிமுகவின் முன்னாள் செய்தி தொடர்பாளர் புகழேந்தி, முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது மேற்கு மண்டல காவல்துறை தலைவர் சுதாகரிடம் புகார் மனு அளித்தார்.
அம்மனுவில் கூறியுள்ளதாவது:-
"கோவை தொண்டாமுத்தூரில் கடந்த 2021-ம் ஆண்டு நடந்த பொதுக்கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் குறித்தும், முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்தும், அவர்கள் குடும்பம் குறித்தும் தனிப்பட்ட முறையில் தரக்குறைவாக ராஜேந்திர பாலாஜி பேசியிருந்தார்.
தொண்டாமுத்தூர் பகுதிக்கு மு.க.ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு வரும் பொழுது அவர் மீது தாக்குதல் நடத்தத் தூண்டும் விதத்தில் பாலாஜி பேசியிருந்தார். முன்னாள் மத்திய அமைச்சர் ராசா குறித்தும் தவறான வார்த்தைகளில் பேசியதுடன், இரு மதங்களிடையே மோதலை ஏற்படுத்தும் விதமாகவும் ராஜேந்திர பாலாஜி பேசியிருந்தார் என குறிப்பிடப்பட்டிருந்தது.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், 'மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமலஹாசன் உட்பட பல்வேறு அரசியல் கட்சியினரை தரக்குறைவாக, முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசி இருக்கிறார்.
இது தேர்தல் நடத்தை விதி முறைகளுக்கு எதிரானது. எனவே அவர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். ராஜேந்திர பாலாஜிக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதில் அரசு தரப்பு வழக்கறிஞர் ராஜேந்திர பாலாஜி குறித்தான சரியான ஆவணங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யாதது தான் ஜாமீன் கிடைக்கக் காரணம்.
கடந்த ஆட்சியில் காவல்துறை அவர்கள் பக்கம் இருந்ததால் நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனப் புகார் அளித்துள்ளேன். என் புகாரைப் பெற்றுக்கொண்ட ஐஜி காவல்துறை இயக்குனர் அலுவலகத்திலும் புகாரைப் பதிவு செய்யுமாறு அறிவித்துள்ளார் என தெரிவித்தார்.