கிராமத்தில் உள்ள கோவில்களை திறக்க அனுமதிக்க வேண்டும். கொரோனா ஊரடங்கு விதிமுறைகளுக்கு உட்பட்டு கோவில்களை திறந்து பக்தர்களை அனுமதிக்க வேண்டும்.
திருப்பூர்: கோவையில் உதயநிதி ஸ்டாலின் நடத்திய கூட்டத்தில் பரவாத கொரோனா கோவில்களில் பரவி விடுமா? திமுக அரசு இந்து விரோத, கோவில் விரோத அரசாக செயல்பட கூடாது என திருப்பூரில் இந்து மக்கள் கட்சியின் தலைவர், அர்ஜுன் சம்பத் கேள்வி எழுப்பியுள்ளார்.
சுதந்திர போராட்ட வீரர் தியாகி திருப்பூர் குமரனின் 90வது நினைவு நாளை முன்னிட்டு இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜின் சம்பத் திருப்பூர் ரயில் நிலையம் அருகே அமைந்துள்ள திருப்பூர் குமரன் நினைவகத்தில் உள்ள குமரன் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.
பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தேசத்தலைவர்கள் அடையாளத்தை அழித்து விட்டு கருணாநிதி மற்றும் ஈ.வே.ரா சிலையை வைப்பது தவறு. இதைக் கேட்க வேண்டிய காங்கிரஸ் கட்சி, திமுகவுடன் கூட்டணி சேர்ந்து வேடிக்கை பார்க்கிறது. குமரன் நினைவிடம் அருகே அமைக்கப்பட்டுள்ள பெரியார், அண்ணா சிலைகளை கோர்ட்டு உத்தரவுபடி உடனடியாக அகற்ற வேண்டும்.
கிருஸ்துமஸ், புத்தாண்டு மற்றும் கோவையில் உதயநிதி ஸ்டாலின் நடத்திய கூட்டத்தில் பரவாத கொரோனா பொங்கல் பண்டிகை அன்று கோவிலுக்கு செல்வதால் பரவி விடுமா? கிராமத்தில் உள்ள கோவில்களை திறக்க அனுமதிக்க வேண்டும். கொரோனா ஊரடங்கு விதிமுறைகளுக்கு உட்பட்டு கோவில்களை திறந்து பக்தர்களை அனுமதிக்க வேண்டும்.
உலக சுகாதார நிறுவன மருத்துவ குழுவினரே, பொது முடக்கம் கொரோனாவிற்கு தீர்வு இல்லை என்று தெரிவித்துள்ளனர். பொது முடக்கம் வந்தால் நாடு தாங்காது. இதனை நான் மட்டும் சொல்லவில்லை. முதல்வர் ஸ்டாலின் கூட இதனை தெரிவித்துள்ளார். டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ளது, சிறப்பு விற்பனை கூட செய்கிறார்கள். கோவில்களை திறக்க கோரி இந்து மக்கள் கட்சி அறவழியில் போராட்டத்தை நடத்தும்.. திமுக அரசு இந்து விரோத, கோவில் விரோத அரசாக செயல்பட கூடாது, என்று தெரிவித்தார்.
இதேபோன்று, திருப்பூர் குமரன் நினைவகத்தில் இன்று காலை முதல் குமரன் சிலைக்கு மாலை அணிவித்து பாஜக, நாம் தமிழர், சிவசேனா, காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் அஞ்சலி செலுத்தினர்.