ஊரடங்கு கட்டுப்பாடுகளிலிருந்து சேரன்மாநகர் குடியிருப்பு பகுதிக்கு மட்டும் விலக்கு: மாஸ்க் அணியாமல் வாகனத்தில் செல்லுதல் கூட்டமாக அமர்ந்து பொழுதை கழித்தல் என மக்கள் அலட்சியம்.
கோவை: சேரன்மாநகர் குடியிருப்பு பகுதியில் மாஸ்க் அணியாமல் வாகனத்தில் செல்லுதல் கூட்டமாக அமர்ந்து பொழுதை கழித்தல் என ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி மக்கள் அலட்சியமாக உள்ளனர்.
கொரோனா மற்றும் ஓமிக்ரான் வைரஸ் தொற்று நோய் பரவல் காரணமாகத் தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வரும் நிலையில், கோவை விளாங்குறிச்சி ரோட்டில் அமைந்துள்ள சேரன்மாநகர் மற்றும் சுற்றுப்புறக் குடியிருப்பு பகுதிகளில் பெரும்பாலான மக்கள் முழு ஊரடங்கு கட்டுப்பாடு விதிமுறைகளை மீறி தொடர்ந்து செயல்பட்டு வருகின்றனர்.
காலை முதல் ரோட்டில் இரு சக்கர நான்கு சக்கர வாகனங்கள் தொடர்ந்து செல்வதைக் காணமுடிகிறது. அவற்றில் பயணிக்கும் பெரும்பாலான மக்கள் மாஸ் அணிவதில்லை. தேவையே இல்லாமல் ஊர் சுற்றுபவர்கள் அதிகமாகக் காணப்படுகின்றனர்.

இது ஒருபுறமிருக்க பொது இடங்களில் சமூக இடைவெளி இல்லாமல் மாஸ்க் அணியாமல் பலர் கூட்டமாக அமர்ந்து பேசிக் கொண்டிருப்பதையும் காண முடிகிறது. வெயிலின் தாக்கம் அதிகம் உள்ள காரணத்தால் மதிய நேரத்தில் சற்று வாகன போக்குவரத்து குறைந்து காணப்பட்டது.
பிற்பகல் 3 மணிக்குப் பின் மீண்டும் வழக்கம்போல் பொதுமக்கள் தங்களுடைய அத்துமீறல்களைத் தொடர்ந்து செய்து வருகின்றனர். சேரன்மாநகர் பகுதி பீளமேடு காவல் நிலையத்திற்குச் சற்று தொலைவில் உள்ளதால் போலீசாரின் கண்காணிப்பு இப்பகுதியில் சற்று குறைவாக உள்ளது.
இதை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும் பல மக்கள் நோய்த்தொற்று விதிமுறைகளை மீறி அலட்சியமாகச் செயல்பட்டு வருகின்றனர். அரசு மக்களுக்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தாலும், ஒவ்வொருவரும் தங்களுடைய பொறுப்பை உணர்ந்து நோய்த்தொற்று பரவலைக் கட்டுப்படுத்த உதவ வேண்டும்.

மாநகராட்சி மற்றும் காவல்துறை அதிகாரிகள் அதிரடி ஆய்வு மேற்கொண்டு தேவையில்லாமல் ஊர் சுற்றி வருபவர்கள் மீது அபராதம் விதித்தல், வாகனம் பறிமுதல் உள்ளிட்டநடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
கோவை மாநகரின் முக்கிய பகுதிகள் முழு ஊரடங்கு முன்னிட்டு வெறிச்சோடி காணப்பட்ட நிலையில், புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள சேரன்மாநகர் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் வாகன போக்குவரத்து மற்றும் மக்கள் நடமாட்டம் வழக்கம்போல் காணப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.