கிணத்துக்கடவு அருகே பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்த வழக்கு; தந்தை, மகன் கைது

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே ஜூலை 27 ஆம் தேதி பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்து சான்றுகளை அழிக்க முயன்ற வழக்கில், பொள்ளாச்சியை சேர்ந்த பழனிமுத்து (35) மற்றும் அவரது தந்தை குருநாதன் (60) ஆகிய இருவரை காவல்துறையினர், கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

கோவை: கோவை மாவட்டம் கிணத்துக்கடவு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சென்றாம்பாளையம் பிரிவு அருகே, தனியார் நிறுவனத்திற்கு அருகிலுள்ள வெற்றிடத்தில் கடந்த ஜூலை 31ஆம் தேதி எரிந்த நிலையில் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டது.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த கிணத்துக்கடவு காவல்துறையினர், உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர்.

இந்த வழக்கில் குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன் குமார் ரெட்டி உத்தரவின் பேரில் நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

கைது குறித்து காவல்துறையினர் தெரிவித்ததாவது:

சம்பவ இடம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள 120-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை ஆய்வு செய்ததில், கடந்த ஜூலை 27ஆம் தேதி இருசக்கர வாகனத்தில் அப்பகுதிக்கு வந்த நபர் ஒருவரின் சிசிடிவி காட்சிகள் கிடைத்தன. அந்த வாகனத்தின் பயணத்தை தொடர்ந்து கண்காணித்ததில், அது பொள்ளாச்சியில் இருந்து வந்தது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், அந்த நபர் பொள்ளாச்சியைச் சேர்ந்த பழனிமுத்து (35) என்பதும், உயிரிழந்தவர் ஜமீன் கோட்டாம்பட்டியைச் சேர்ந்த சங்கீதா (30) என்பதும் உறுதி செய்யப்பட்டது.



மேலும், பழனிமுத்துவுக்கும் சங்கீதாவுக்கும் கடந்த மூன்று ஆண்டுகளாக நெருங்கிய பழக்கம் இருந்து வந்ததாகவும், கடந்த ஆறு மாதங்களாக சங்கீதா வேறொருவருடன் தொடர்பில் இருப்பதாக சந்தேகமடைந்த பழனிமுத்து, இதுதொடர்பாக அடிக்கடி தகராறு செய்து வந்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த நிலையில், கடந்த ஜூலை 27ஆம் தேதி இரவு கிணத்துக்கடவில் உள்ள தனது வாடகை வீட்டில் ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது, பழனிமுத்து கத்தியால் சங்கீதாவைக் குத்திக் கொலை செய்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

கொலைக்குப் பின்னர், தனது தந்தை குருநாதன் (60) உதவியுடன், சங்கீதாவின் உடலை போர்வையில் சுற்றி இருசக்கர வாகனத்தில் எடுத்துச் சென்று, சென்றாம்பாளையம் பிரிவு அருகே உள்ள காட்டுப்பகுதியில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்து, சான்றுகளை அழிக்க முயன்றதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதையடுத்து, சந்தேக மரணம் வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டு, பழனிமுத்து மற்றும் அவரது தந்தை குருநாதன் ஆகியோர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டனர்.

120-க்கும் மேற்பட்ட சிசிடிவி பதிவுகள், தொழில்நுட்ப ஆதாரங்கள் மற்றும் அறிவியல் பூர்வமான விசாரணையின் மூலம் மிகக் குறுகிய காலத்தில் குற்றவாளிகளை கண்டறிந்து கைது செய்த தனிப்படை காவல்துறையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன் குமார் ரெட்டி பாராட்டியுள்ளார்.

Newsletter

கிணத்துக்கடவு அருகே பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்த வழக்கு; தந்தை, மகன் கைது

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே ஜூலை 27 ஆம் தேதி பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்து சான்றுகளை அழிக்க முயன்ற வழக்கில், ப...

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...