குன்னூர் நஞ்சப்பா சத்திரம் பகுதியில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த இந்திய ராணுவ வீரர்களுக்குத் தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி மலர் வளையம் வைத்தும், மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
நீலகிரி: குன்னூர் நஞ்சப்பா சத்திரம் பகுதியில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த இந்திய ராணுவ வீரர்களுக்குத் தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி மலர் வளையம் வைத்தும், மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
நீலகிரி மாவட்டம் குன்னூர் நஞ்சப்பா சத்திரம் பகுதியில் டிசம்பர் 8-ஆம் தேதி கோவை சூலூர் விமானப்படைத் தளத்திலிருந்து வெலிங்டன் ராணுவ மையத்தை நோக்கிச் சென்ற ராணுவ ஹெலிகாப்டர் நஞ்சப்பா சத்திரம் பகுதியில் மேக மூட்டத்தின் காரணமாக மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதில் ஹெலிகாப்டரில் பயணம் செய்த இந்திய முப்படை தளபதி பிபின் ராவத் அவரது மனைவி மதுலிகா மற்றும் ராணுவ அதிகாரிகள் உட்பட 14-பேர் உயிரிழந்தனர். விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்குத் தமிழக முதல்வர் வெலிங்டன் ராணுவ மையத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
இதனைத்தொடர்ந்து ஹெலிகாப்டர் விழுந்து விபத்து ஏற்பட்ட நஞ்சப்பா சத்திரம் பகுதியில் ஒரு கிலோ மீட்டர் தொலைவிற்கு ராணுவ கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டு, விமானப்படை அதிகாரிகள் மற்றும் ராணுவ துறையினர் விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரின் அனைத்து பாகங்களையும் சேகரித்து சூலூர் விமானப்படைத் தளத்துக்குக் கொண்டு சென்றனர்.
இதனையடுத்து கடந்த 18-நாட்களாக ராணுவ கட்டுப்பாட்டிலிருந்து வந்த நஞ்சப்பா சத்திரம் பகுதியிலிருந்து இராணுவத்தினர் வெளியேறி தடையை விலக்கிக் கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து உதகைக்கு இரண்டு நாள் பயணம் மேற்கொண்ட தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி குன்னூர் நஞ்சப்பா சத்திரம் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து ஏற்பட்ட பகுதியில் உயிரிழந்த இராணுவ வீரர்களின் புகைப்படத்திற்கு மலர் வளையம் வைத்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினார்.
அவருடன் அவரது மனைவி, மகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
மேலும் நஞ்சப்பா சத்திரம் பகுதியில் வசிக்கும் மக்களிடம் விபத்து குறித்தும் மீட்பு பணிகள் குறித்தும் கேட்டறிந்தார்.