நூல் விலை உயர்வுக்கு எதிராக ஜனவரி 17-மற்றும் 18-ம் தேதிகளில் பின்னலாடை உற்பத்தி நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாகத் திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர்: நூல் விலை உயர்வுக்கு எதிராக ஜனவரி 17-மற்றும் 18-ம் தேதிகளில் பின்னலாடை உற்பத்தி நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாகத் திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம் முழுவதும் பல்லாயிரக்கணக்கான பின்னலாடை மற்றும் அதனைச் சார்ந்த நிறுவனங்கள் செயல்பட்டு வரக் கூடிய சூழ்நிலையில் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
பின்னலாடை உற்பத்திக்கு மிக முக்கிய மூலப்பொருளான நூல் விலை கடந்த ஒரு வருட காலமாக அபரிமிதமாக விலை உயர்ந்து வரக்கூடிய சூழ்நிலையில், தற்போது 330- முதல் 380- வரை விற்கப்படுவதால் முன்கூட்டியே பெற்ற ஆர்டர்களை முடிப்பதிலும், புதிய ஆர்டர்களை பெறுவதிலும் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து, ஏற்கனவே பல முறை மத்திய அரசின் கவனத்திற்குக் கொண்டு சென்று நவம்பர் 26-ஆம் தேதி ஒரு நாள் வேலை நிறுத்தம் மற்றும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியும், நூல் விலை மீண்டும் உயர்ந்து வருவதால் பின்னலாடை தொழில் முழுவதும் முடங்கக் கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும், இதனை மத்திய அரசின் கவனத்திற்குக் கொண்டுசெல்லும் வகையில் ஜனவரி 17-மற்றும் 18-ம் தேதிகளில் திருப்பூர் மாவட்டத்தில் அனைத்து பின்னலாடை நிறுவனங்களில் உற்பத்தி நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும், உடனடியாக மத்திய அரசு கவனத்தில் கொண்டு பருத்தி இறக்குமதிக்கான 11-சதவீத வரியை ரத்து செய்ய வேண்டும், நூல் மற்றும் பருத்தி ஏற்றுமதியைக் குறிப்பிட்ட காலத்திற்குத் தடை செய்து உள்நாட்டு உற்பத்திக்கு அதிக அளவு பயன்படுத்தத் தேவையான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் எனவும் ஏற்றுமதியாளர் சங்கத் தலைவர் ராஜா சண்முகம் கேட்டுக்கொண்டார்.
ஜனவரி 17-மற்றும் 18-ம் தேதிகளில் நடைபெற உள்ள உற்பத்தி நிறுத்தப் போராட்டத்திற்குத் திருப்பூரில் அனைத்து தொழில் சார்ந்த அமைப்புகளிடம் ஆதரவு கேட்கப் போவதாகத் தெரிவித்தார்.