பிசியோ தெரபி சிகிச்சை அளிப்பதாக கூறி கவனத்தை திசைதிருப்பி மூதாட்டியிடம் 5-பவுன் நகையை எடுத்து சென்ற இளம்பெண்ணை போலீசார் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து தேடி வருகிறார்கள்.
கோவை: பிசியோ தெரபி சிகிச்சை அளிப்பதாக கூறி கவனத்தை திசைதிருப்பி மூதாட்டியிடம் 5-பவுன் நகையை எடுத்து சென்ற மர்ம பெண்ணை போலீசார் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து தேடி வருகிறார்கள்.
பொள்ளாச்சி சாங்ஸ் திருவீதிப் பகுதியைச் சேர்ந்த காந்தி என்பவரின் மகன் சிவசுப்பிரமணியன் 63. இவர் தனது மனைவி அமுதா உடன் தனியாக வசித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சிவசுப்பிரமணியனும் அவரது மனைவி அமுதாவும் வீட்டிலிருந்தனர்.
அப்போது வீட்டிற்கு வந்த இளம்பெண் ஒருவர் தனக்கு பிசியோதெரபி சிகிச்சை தெரியும் என்றும் புதுக்கோட்டையில் உள்ள பாக்கியம் டீச்சர் மகள் என்றும் தன்னை அறிமுகப்படுத்தியுள்ளார்.
மேலும், சிவசுப்பிரமணியன் மனைவி அமுதா ஏற்கனவே புதுக்கோட்டையில் உள்ள பள்ளியில் படித்தவர். எனவே நம்பிக்கையோடு அந்த இளம்பெண்ணிடம் சிவசுப்ரமணியம் மற்றும் அவரது மனைவி அமுதா ஆகியோர் பேசியுள்ளனர். தொடர்ந்து சுப்பிரமணியத்தின் மனைவி தனக்குக் கழுத்து வலி இருப்பதாகக் கூறியிருக்கிறார்.
இதை அடுத்து வந்திருந்த இளம்பெண் அமுதாவிடம் கழுத்தில் அணிந்திருக்கும் தங்கச் செயினை கழற்றி வைக்குமாறு கூறியிருக்கிறார். பின்னர் எண்ணெய்யை எடுத்து அவரது கழுத்து மற்றும் கை பகுதிகளில் தேய்த்து பிசியோ தெரபி உடற்பயிற்சிகளைச் செய்துள்ளார்.
பின்னர் அமுதா குளியலறைக்குச் சென்று குளித்து விட்டு மீண்டும் வெளியே வந்து பார்த்தபோது அந்த இளம்பெண் மாயமாகி இருந்தார். மேலும், கழற்றி வைத்து இருந்த 5-பவுன் தங்க செயினும் காணாமல் போயிருந்தது.
வெளியில் சென்று அந்த இளம்பெண்ணைத் தேடிய பொழுது எங்கும் அவர் இல்லை. இதை அடுத்து சிவசுப்பிரமணியம் பொள்ளாச்சி மேற்கு போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.