ஒரு சார்பினருக்கு மட்டும் டோக்கன்கள் விநியோக்கிக்கப்படுவதாக தமிழ்நாடு ஜல்லிக்கட்டு இளைஞர் பேரவையினர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளனர்.
கோவை: கோவை மாவட்டத்தில் நடைபெறவிருக்கும் ஜல்லிக்கட்டு போட்டிக்கு ஒரு சார்பினருக்கு மட்டும் டோக்கன்கள் விநியோக்கிக்கப்படுவதாக தமிழ்நாடு ஜல்லிக்கட்டு இளைஞர் பேரவையினர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளனர்.
இது தொடர்பாக அவர்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-
கடந்த 2019ம் ஆண்டு தமிழ்நாடு ஜல்லிக்கட்டு இளைஞர் பேரவை என்ற அறக்கட்டளை கோயம்புத்தூர் காந்திபுரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்து, அதன் மூலம் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு சிறந்த முறையில் நடைபெற்று வருகிறது.
மாடுபிடி வீரர்கள் நலம் மற்றும் ஜல்லிக்கட்டு காளை வளர்ப்பு முறைகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். தமிழ்நாடு ஜல்லிக்கட்டு இளைஞர் பேரவையில் மாவட்டம் தோறும் உறுப்பினர்கள் மற்றும் தொண்டர்கள் இருந்து செயல்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், இந்த ஆண்டு கோயம்புத்தூரில் எல்.என்.டி பைபாஸ் சாலை அருகே ஜல்லிக்கட்டு போட்டி வரும் 9ம் தேதி நடைபெற உள்ளது.
இந்த சூழ்நிலையில், அந்த போட்டியில் கலந்துகொள்ள எங்களது அறக்கட்டளையைச் சேர்ந்த உறுப்பினர்கள் விழா கமிட்டியை தொடர்பு கொண்டபோது, மாடுபிடி வீரர்கள் மற்றும் காளை உரிமையாளர்கள் விண்ணப்பங்கள் கொடுக்கச் சென்றபோது ஏற்க மறுத்துள்ளனர்.
எனவே, மாவட்ட ஆட்சியர் தகுந்த நடவடிக்கை எடுத்து முறையாக டோக்கன் வழங்கி, ஜல்லிக்கட்டு போட்டியில் வீரர்கள் கலந்து கொள்ள செய்ய வேண்டுமென அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
இது குறித்து அவர்கள் கூறுகையில்,
கோவையில் நடைபெற இருக்கும் ஜல்லிக்கட்டு போட்டிக்கு சில அமைப்புகளைச் சார்ந்தவர்களுக்கு மட்டும் டோக்கன்கள் வழங்கப்பட்டு மிகப்பெரிய முறைகேடு நடைபெற்று வருகிறது. இதனால் விவசாயிகள் பலரும் பாதிக்கப்படுகின்றனர். கோவையில் நடைபெறும் ஜல்லிக்கட்டிற்கு பிற மாவட்டங்களில் டோக்கன்கள் வழங்குகின்றனர்.
எனவே, ஜல்லிக்கட்டு நடைபெறும் பொது இடத்திலேயே டோக்கன்கள் வழங்கப்பட வேண்டும். சில அமைப்புகள் தலையீட்டின் காரணமாகவே இதில் அரசியல் தலையீடுகளும் வருகின்றது. முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் டோக்கன்கள் வழங்கப்பட வேண்டும்.
இல்லையென்றால் எங்கள் பேரவை சார்பில் மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்படும். ஜல்லிக்கட்டை என்றும் அரசியலாக பார்க்க வேண்டாம் என தெரிவித்துள்ளனர்.