முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உடல் நிலை குறித்து அப்பல்லோ மருத்துவமனை மருத்துவர் ரெட்டி, சுகாதாரத் துறை அமைச்சர், சுகாதாரத் துறை செயலாளர் ஆகியோரிடம் கேட்டு தெரிந்து கொண்டோம் என கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்துள்ளார்.
கோவையில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் இன்று செய்தியாளர்ளுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்த போது, மருத்துவமனை மருத்துவர் ரெட்டி, சுகாதாரத் துறை அமைச்சர், சுகாதாரத் துறை செயலாளர் போன்ற அங்கேயே தங்கியிருந்தவர்களிடம் ஜெயலலிதா உடல்நிலை குறித்து கேட்டறிந்தோம். உடல்நிலை குறித்து அங்கேயே தங்கி இருந்தவர்களிடம் விசாரித்துதான் வந்திருக்கின்றோம்.
தற்போதைய தமிழக முதலமைச்சர், அமைச்சர்கள் குறித்து டி.டி.வி.தினகரன் சொல்லும் வார்த்தைகள் மூலமாக அவர் அவரது தரத்தை வெளிப்படுத்துகிறார். தினகரன் மீண்டும் அதிமுக-வில் இணைய "காலம் பதில் சொல்லும்".

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க விசாரணை கமிஷன் அமைக்க முதலமைச்சர் உத்திரவிட்டு இருக்கின்றார். இதில், சிறந்த விமர்சனங்களுக்கு அப்பாற்றபட்ட நீதிபதி விசாரணை கமிஷனில் நியமிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது.
ஜெயலலிதா மரணம் குறித்து ஓ.பன்னீர்செல்வம் சி.பி.ஐ விசாரணை என்ற தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டது குறித்து அவரிடம்தான் கேட்க வேணடும்.
மேலும், ஜெனீவாவில் வைகோ மீதான தாக்குதல் முயற்சியை தொடர்ந்து அவருக்கு அங்கு பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு கொடுக்கவில்லை என்றால் அதிமுக சார்பில் நிச்சயம் கண்டனம் தெரிவித்திருப்போம்.
இவ்வாறு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்தார்.