திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் விசாரணைக்காக அழைத்துச் சென்று காவல் துறையினர் தாக்கியதில் தினேஷ் என்ற கட்டுமான தொழிலாளி உயிரிழந்ததாக உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பகுதியைச் சேர்ந்தவர் தினேஷ் (20 ). இவர் திருப்பூர் மாவட்டத்தில் கட்டுமான தொழிலாளியாக பணியாற்றி வந்தார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஒரு திருட்டு வழக்கு தொடர்பான விசாரணைக்காக தினேஷ் மற்றும் அவரது நண்பர் ஒருவரை திருப்பூர் வடக்கு காவல் நிலைய போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு வலிப்பு ஏற்பட்டதால் தினேஷ் கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக போலீசார் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனிடையே சிகிச்சைக்காக தினேஷ் கோவை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
இந்த நிலையில், காவல்துறையினர் தாக்கியதால் தான் தினேஷ் உயிரிழந்ததாக அவரது உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து தினேஷ்-ன் உறவினர் முத்து என்பவர் கூறுகையில், 'காவல் நிலையத்தில் போலீசார் தாக்கியதில் கழுத்து எலும்பு உடைந்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தினேஷ் உயிரிழந்துள்ளார். பின்னர் தான் அவர் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். தினேஷ்-ன் மெடிக்கல் ரிப்போர்ட்டை போலீசார் மற்றும் மருத்துவமனை நிர்வாகத்தினர் காட்ட மறுக்கின்றனர்.
மேலும், தினேஷை தனியார் மருத்துவமனையில் உடனிருந்து கவனித்துவந்த தந்தை நாகராஜை உறவினர்களிடம் போலீசார் காட்ட மறுக்கின்றனர்.

எனவே, தினேஷ் மரணத்தில் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மிது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.