திருப்பூரில் முக்கிய நான்கு பகுதிகளில் சாலை பாதுகாப்பின் அவசியத்தை கொண்டு செல்லும் விதமாக மனித சங்கிலி மூலம் பள்ளி மாணவர்கள் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். இந்நிகழ்வை போலீஸ் உதவி கமிஷனர் அனில்குமார் தொடங்கி வைத்தார்.
திருப்பூர்: திருப்பூரில் தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வை போலீஸ் உதவி கமிஷனர் அனில்குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியை மாணவ-மாணவிகள் திருப்பூர் புஷ்பா சந்திப்பில் அவினாசி ரோடு, பி.என்.ரோடு, காலேஜ் ரோடு, ரெயில்வே மேம்பாலம் உள்ளிட்ட 4 இடங்களில் கட்டாயம் தலைக்கவசம் அணிவது, மது குடித்துவிட்டு, செல்போன் பேசிக் கொண்டு வாகனம் ஓட்டக்கூடாது, அதிவேகமாகவும், ஒருவழிப் பாதையிலும் செல்லக்கூடாது, சாலை விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கைகளில் ஏந்தியபடி மனித சங்கிலியாக நின்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.
இதற்கு முன்னதாக சாலை விதிமுறைகளை மீறுவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மாணவிகள் தத்ரூபமாக நடித்துக் காட்டினார்கள். இதில் ரோட்டரி சங்க நிர்வாகிகள், பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், காவல்துறையினர் கலந்து கொண்டனர்.