கோவை சரவணம்பட்டி அருகே குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் தொழிலாளியை கட்டையால் அடித்துக் கொலை செய்த நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
கோவை: கோவை கணபதி அண்ணா நகரை சேர்ந்தவர் வெங்கடேஷ் (53). கூலி தொழிலாளியான இவர் கருத்து வேறுபாடு காரணமாக தனது மனைவியை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்துள்ளார்.
இந்நிலையில், குடிபோதைக்கு அடிமையான வெங்கடேஷ் தினமும் வேலை முடிந்து மது குடித்துவிட்டு வீட்டுக்கு வருவது வழக்கமாக வைத்திருந்துள்ளார். இதேபோல் நேற்றிரவு வேலை முடிந்து அவர் அப்பகுதியில் உள்ள நகர் நல மையம் அருகே சிலருடன் அமர்ந்து மது அருந்தியுள்ளார்.
அப்போது வெங்கட்டேஷுக்கும் மற்றொருவருக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த அந்த நபர் கீழே கிடந்த உருட்டு கட்டையால் வெங்கடேஷை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த வெங்கடேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
இதனிடையே, பயந்து போன அந்த நபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டதாக தெரிகிறது. இந்நிலையில், வெங்கடேஷ் கொலை செய்யப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள், சரவணம்பட்டி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வெங்கடேஷை உருட்டு கட்டையால் தாக்கி கொலை செய்த நபர் யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.