இந்திய அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள சிறுபான்மையினரின் வழிபாட்டு உரிமையை பாதுகாக்க வேண்டும் என்று வலியுறுத்தி திருப்பூர் ஆட்சியர் அலுவலகம் முன்பாக இஸ்லாமியர்கள் கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் 15.வேலம்பாளையம், அவிநாசி, திருமுருகன்பூண்டி உள்ளிட்ட பகுதிகளில் இஸ்லாமியர்களின் மத வழிபாட்டு உரிமையை பறிக்கும் வகையில் ஒரு சில அதிகாரிகள் தொடர்ந்து செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
இதனை கண்டித்து, திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே அனைத்து இஸ்லாமிய ஜமாத் கூட்டமைப்பினரின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில், 15 வேலம்பாளையம் மசூதி தொடர்பாக தனி நபர்கள் தொடுத்த வழக்கின் காரணமாக இஸ்லாமியர்களின் தொழுகை உரிமையை மறுக்கும் வகையில் செயல்பட்டு வருவதாக குற்றம் சாட்டப்பட்டது.
இதன் காரணமாக வழிபாட்டு உரிமையை மறுக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்து இந்திய அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள சிறுபான்மையினரின் வழிபாட்டு உரிமையை பாதுகாத்திட வேண்டும் என வலியுறுத்தினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நிகழாமல் இருக்கும் வகையில், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.