கோவை வடக்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்த ஜமாபந்தி நிகழ்ச்சியில் தெலுங்குபாளையம், அனுப்பர்பாளையம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கை மனுக்களை அளித்தனர்.
கோவை: கோவை வடக்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்த ஜமாபந்தி நிகழ்ச்சியில் தெலுங்குபாளையம், அனுப்பர்பாளையம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கை மனுக்களை அளித்தனர்.
ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் ஜமாபந்தி நிகழ்ச்சி கொரோனா தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்தது.
இந்த நிலையில் கடந்த 23ம் தேதி முதல் ஜூன் 3ம் தேதி வரை கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
இதன் ஒரு பகுதியாக இன்று கோவை வடக்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் அனுப்பர்பாளையம், தெலுங்குபாளையம் கிராமத்திற்கு உட்பட்ட பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் ஜமாபந்தியில் கலந்து கொண்டு தங்களது கோரிக்கை மனுக்களை வழங்கினர்.
இதில் தெலுங்குபாளையம் பகுதிக்கு உட்பட்ட, பிஎன் புதூர், சீரநாயக்கன்பாளையம், பூசாரிபாளையத்தில், வேலாண்டிபாளையம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கான பென்ஷன் தொகை, முதிர்கன்னிகள் உதவித்தொகை மற்றும் இலவச வீட்டு மனை பட்டா வழங்க மனு அளித்தனர்.
இந்த நிகழ்ச்சியில், கோவை மாநகராட்சி 41 வது வார்டு மாமன்ற உறுப்பினர் சாந்தி தலைமையில் பாப்பநாயக்கன்புதூர் பகுதிகளை சேர்ந்த மக்கள் தங்களது பிரச்சனைகள் குறித்து மனு அளித்தனர்.
மனுக்களை பெற்றுக் கொண்ட சமூக பாதுகாப்பு திட்ட அலுவலர் முருகேசன், உரிய அதிகாரிகளிடத்தில் இந்த மனுக்களை வழங்கி, இந்த பகுதி மக்களின் குறைகளை நிவர்த்தி செய்து தருவதாக உறுதியளித்தார்.