கோவையில் கொடிசியா வர்த்தக கண்காட்சி வளாகம் முதல் விளாங்குறிச்சி வழியாக சத்தியமங்கலம் சாலையை இணைக்கும் திட்ட சாலை பணியை துவக்க மாநகராட்சி அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
கோவை: கோவை மாநகரில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில் தமிழக அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
குறிப்பாக அவிநாசி சாலையில் அமைந்துள்ள கொடிசியா வர்த்தக கண்காட்சி வளாகம் அருகே தொடங்கி என்ஆர்ஐ கார்டன், கோ ஆப்ரெட்டிவ் காலனி, விளாங்குறிச்சி வழியாக சத்தியமங்கலம் சாலையை இணைக்கும் திட்ட சாலை பணியை துவக்க வேண்டும் என மக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
மக்களின் தேவையை உணர்ந்து இந்த வழித்தடத்தில் உள்ள நில உரிமையாளர்கள் சிலர் தாமாக முன்வந்து அரசுக்கு தங்களது நிலத்தை வழங்க ஒப்புதல் தெரிவித்துள்ளனர்.
இத்திட்டத்தை விரைந்து செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோ ஆப்ரெட்டிவ் காலனி நல சங்க நிர்வாகிகள் ராமசாமி, ராஜசேகர் ஆகியோர் 22வது வார்டு கவுன்சிலர் கோவை பாபுவிடம் தெரிவித்தனர். கோவை மாநகராட்சி மாமன்ற முதல் கூட்டத்திலேயே கவுன்சிலர் கோவை பாபு இந்த கோரிக்கை குறித்து பேசினார்.
இன்று காலை நகரமைப்பு அதிகாரி ஜெயலட்சுமி சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு பணி மேற்கொண்டர்.
கொடிசியா வளாகம் அருகே உள்ள கீதாஞ்சலி பள்ளி வளாகம் அருகே தொடங்கி வடக்கு திசையில் காலி மனையிட நிலங்கள் வழியாக என் ஆர்.ஜ கார்டன் குடியிருப்பு சாலையுடன் இணைந்து சற்று மேற்கு திசையில் திரும்பி அங்கிருந்து வடக்கு முகமாக சென்று எஸ்.ஆர் அவென்யூ, கோ ஆப்ரெட்டிவ் காலனி மற்றும் ஸ்ரீ ராகவேந்திரா அவென்யூ வழியாக சேரன்மாநகர் குடியிருப்பு வழியாக திட்ட சாலையில் இணைந்து விளாங்குறிச்சி வழியாக சத்தியமங்கலம் பிரதான சாலையில் இணைக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.
இதையடுத்து நில மதிப்பீடு பணி தொடர்பாக நில உரிமையாளரிடம் பேச்சுவார்த்தை உள்ளிட்ட அடுத்த கட்ட பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பல ஆண்டுகளுக்குப் பின் சாலை பணிக்கு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது மக்கள் மத்தியில் மிகுந்த நம்பிக்கை ஏற்படுத்தி உள்ளது.