தனியார் விடுதிக்குள் புகுந்து இரண்டு இருசக்கர வாகனங்களை திருடி சென்ற நான்கு மர்ம நபர்களை சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
கோவை: கோவையில் தனியார் விடுதியில் நிறுத்தி வைக்கப்பட்ட இரண்டு இருசக்கர வாகனத்தை திருடிய மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அய்யம்பட்டியை சேர்ந்தவர் ரகுவரன் (33). இவர் கோவை காட்டூர் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் தங்கி வெல்டிங் வேலை செய்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த மே 11-ம் தேதி பணிக்குச் சென்று விட்டு வந்த ரகுவரன் வழக்கம்போல் தனது இருசக்கர வாகனத்தை விடுதி வளாகத்தில் நிறுத்தி விட்டு தனது அறைக்கு சென்றுள்ளார்.
பின்னர் மறுநாள் காலை வந்து பார்த்தபோது அவரது ஆக்டிவா இரு சக்கர வாகனம் மாயமானது தெரியவந்தது. அதேபோல் அதே விடுதியில் தங்கியிருக்கும் வால்பாறையை சேர்ந்த வங்கி ஊழியர் சூர்யா என்பவரின் ஆர்15 யமஹா இருசக்கர வாகனத்தையும் மர்ம நபர்கள் திருடி சென்றதும் தெரியவந்தது.
இந்நிலையில் ரகுவரன் கோவை காட்டூர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அந்த விடுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அப்போது புல்லட் வண்டியில் வந்த 4 மர்ம நபர்கள் தங்கள் இருசக்கர வாகனத்தை வெளியே நிறுத்திவிட்டு, விடுதிக்குள் புகுந்து அந்த இரண்டு இருசக்கர வாகனத்தையும் திருடிச் சென்ற காட்சிகள் பதிவாகி இருந்தது.
இதையடுத்து, சிசிடிவி காட்சிகளை வைத்து தப்பிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். கடந்த 2 மாதத்தில் சுமார் ஐந்துக்கு மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் அதே பகுதியில் திருடப்பட்டது குறிப்பிடத்தக்கது.