மக்களின் நலன் கருதி மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை குறைத்து தங்களது வரி வருவாயை குறைத்தது போல், மாநில அரசும் மக்களுக்காக பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும் என பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
கோவை: மாநிலத்தின் தலைநகரில் பாஜக பிரமுகர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் மூலம் தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு கேள்விக்குறியாகி உள்ளது என பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்ட பாஜக அலுவலகத்தில் பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், மக்களின் நலன் கருதி மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை குறைத்து தங்களது வரி வருவாயை குறைத்தது போல், மாநில அரசும் மக்களுக்கு பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும் எனவும், மக்களுக்காக தங்களது வரி வருவாயை மத்திய அரசு குறைத்து போல், மாநில அரசும் மக்களுக்காக வரி வருவாயை குறைத்து கொள்வதில் தவறில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும் தமிழக அரசு பெட்ரோல், டீசல் விலையை குறைக்காது என்று தமிழக முதல்வர் பிடிவாதம் பிடித்து வருவதாக தெரிவித்த வானதி சீனிவாசன், மாநில அரசு தங்களது வரி வருவாயை குறைக்காமல் மத்திய அரசை குறை கூறி வருவதில் எந்த நியாயமும் இல்லை எனத் தெரிவித்தார்.
அதேபோல் மத்திய அரசு தொழில் நிறுவனங்களின் கோரிக்கையை ஏற்று மூலப்பொருட்களின் விலையை குறைந்துள்ளதாகவும், அரசியல் ஆதாயத்திற்காக கூட்டாட்சி தத்துவம் குறித்து மாநில அரசு தவறாக, பொதுமக்களிடம் பொய் பிரச்சாரம் செய்யக்கூடாது எனக் கேட்டுக்கொண்ட அவர், தனிப்பட்ட ஆதாயத்திற்காக மோடி அரசை எதிர்ப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
கொரோனாவால் தொழில் முடங்கினாலும் வரி வருவாயை அதிகரித்து மாநில அரசுக்கு நிதியை, மத்திய அரசு வழங்கி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
சென்னையில் பாஜக பிரமுக வெட்டி படுகொலை செய்யப்பட்டது குறித்து பேசிய வானதி சீனிவாசன், மாநிலத்தின் தலைநகரிலே ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளது என்பது, தமிழகத்தின் சட்டம், ஒழுங்கு கேள்விக்குறியாகி உள்ளதை காட்டுவதாகவும் அவர் தெரிவித்தார்.
அதேபோல் யாருக்கும் பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளதாகவும், குறிப்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு எதிரான மிரட்டல் அதிகரித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
திமுகவின் சமூக நீதி சட்டம் வார்த்தையில் இல்லாமல் செயலில் இருக்க வேண்டும் என தெரிவித்த வானதி சீனிவாசன், ஆட்சிக்கு வந்த ஓராண்டில் ஊடகங்களை மிரட்டி பணிய வைக்க வேண்டும் என்கிற போக்கு தற்போது திமுக விற்கு வந்துள்ளதாகவும், ஏன் திமுக விற்கு வாக்களித்தோம் என மக்கள் நினைப்பதாகவும் அவர் தெரிவித்தார்.