பல்லடம் அருகே கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யச் சென்ற இருவர் விஷவாயு தாக்கி கவலைக்கிடமான நிலையில் திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
திருப்பூர்: கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யச் சென்ற இருவர் விஷவாயு தாக்கி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த பாச்சாங்காட்டுபாளையம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். இவரது தோட்டத்து வீட்டில் உள்ள கழிவறை செப்டிக் டேங்க்கை சுத்தம் செய்ய தனியார் வாகனத்தை அணுகியுள்ளார்.
வாகன உரிமையாளர் தண்டபாணி 60 மற்றும் தனது பணியாளர்களுடன் சுரேஷின் வீட்டிற்கு சென்று கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்து வந்துள்ளனர். கழிவுநீரை வாகனம் மூலம் அகற்றிய பின்னர் மீண்டும் தண்ணீரை அடித்து செப்டிக் டேங்க்கை முழுமையாக சுத்தம் செய்ய கார்த்தி(20) தண்டபாணி (60) இரண்டு பேரும் உள்ளே இறங்கி உள்ளனர்.
பாதுகாப்பு உபகரணங்கள் இருந்த போதும் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்து விட்டதால் எந்த விதமான பாதுகாப்பு உபகரணங்களையும் எடுக்காமல் உள்ளே இறங்கி உள்ளனர். ஆனால் அவர்கள் எதிர்பார்க்காத விதமாக விஷவாயு தாக்கி இருவரும் மயக்கமடைந்து உள்ளேயே விழுந்தனர்.
இதையடுத்து உடன் சென்ற பணியாளர்கள் கொடுத்த தகவலின் பேரில் பல்லடம் தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து இருவரையும் பாதுகாப்பாக வெளியேற்றினர்.
இருவரும் திருப்பூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக பல்லடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.