திருப்பூரில் குடிநீர் விநியோகிக்கும் வாட்டர்மேன் வேலை செய்து வந்த ஊழியர் மீது இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் ஊழியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த மாதப்பூரை சேர்ந்தவர் சுப்பிரமணி. மாதப்பூர் பஞ்சாயத்து நிர்வாகத்தின் கீழ் குடிநீர் பணி விநியோகிக்கும் வாட்டர்மேன் வேலை செய்து வருகிறார்.
பணி முடிந்து தாராபுரம் சாலை வழியாக வீடு திரும்பிக் கொண்டிருந்த பொழுது கள்ளக்கிணறு அருகே சாலையை கடக்க முயன்றார். அப்போது தாராபுரம் சாலையில் இருந்து பல்லடம் நோக்கி வந்து கொண்டிருந்த இருசக்கர வாகனம் மோதி விபத்து ஏற்பட்டது.
இதில் படுகாயமடைந்த சுப்பிரமணியை மீட்ட அப்பகுதியினர் பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
இந்த விபத்து குறித்து பல்லடம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்தின் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.