கோவையில் பெரியகுளம், உக்கடம், வாலாங்குளம் ஆகிய பகுதிகளில் இன்னும் 2 மாத காலங்களில் பொதுமக்கள் படகு சவாரியை பயன்படுத்த ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கோவை: கோவை மாநகராட்சியில் ஸ்மாா்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புனரமைக்கப்பட்டு, நவீனப்படுத்தப்பட்ட உக்கடம் பெரியகுளம், செல்வசிந்தாமணி குளம், வாலாங்குளத்தின் ஒரு பகுதி மற்றும் புனரமைக்கப்பட்டு வரும் குமாரசாமி, செல்வம்பதி குளத்தின் ஒரு பகுதி ஆகியவற்றை மாநகராட்சி நிா்வாகம், கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தது.
இதில், உக்கடம் பெரிய குளத்தின் கரையின் மீது நடைப்பயிற்சி பாதை, மிதிவண்டி பாதை, இருக்கைகள், நிழற்குடைகள், குழந்தைகள் பூங்கா, செல்ஃபி ஸ்பாட் போன்றவை அமைக்கப்பட்டுள்ளன. மேலும், திறந்தவெளி அரங்கம், விளையாட்டுத் திடல், உணவுக் கூடங்கள், படகுத்துறை, மிதவை உணவகம், குளத்துக்கு வரும் கழிவு நீரை சுத்தம் செய்ய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் என பல்வேறு சிறப்பு அம்சங்கள் ரூ.62.17 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும், செல்வசிந்தாமணி குளம் ரூ.31.47 கோடி மதிப்பீட்டில், வாலாங்குளம் குறுக்கே உள்ள சாலைப் பகுதி ரூ.24.31 கோடி மதிப்பீட்டிலும், வாலாங்குளத்தில் கரையானது ரூ.67.86 கோடி மதிப்பீட்டில் புனரமைத்து மேம்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், செல்வம்பதி மற்றும் குமாரசாமி குளங்கள் ரூ.31.25 கோடி மதிப்பீட்டில் புனரமைத்து மேம்படுத்தப்பட்டுள்ளன.
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் இக்குளங்களில், பல்வேறு வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், உக்கடம் பெரியகுளத்தில் படகு சவாரி மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்றுவரை சோதனை ஓட்டத்தில் உள்ள படகு சவாரியை, மக்கள் பயன்பாட்டுக்கு நிரந்தரமாக கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறும்போது, "உக்கடம், பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தில் 2 மாதங்களில் படகு சவாரி மக்கள் பயன்பாட்டுக்கு வர தேவையான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இன்னும் 2 மாதங்களில் படகு சவாரி மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்படும்", என்றாா்.