இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி பொதுமக்கள் 100-க்கும் மேற்பட்டோர் பல்லடம், திருப்பூர் பிரதான சாலையில் திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர்: பல்லடம் அருகே நீர்நிலை பகுதியில் உள்ள பொதுமக்களை இடமாற்றம் செய்ய வேண்டும் என அதிகாரிகள் கூறியதால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த செங்குட்டை பகுதியில் 70-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். ரேசன் கடை, குடிநீர் தொட்டி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் பல்லடம் நகராட்சி சார்பில் செய்து கொடுக்கப்பட்ட நிலையில் அப்பகுதி நீர் வழிப்பாதையில் அமைந்துள்ளதாக கூறி பொதுமக்கள் குடியிருப்பினை அகற்ற வேண்டும் என வருவாய்த்துறை சார்பில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு நோட்டீஸ் வழங்கப்பட்டது.
குடியிருப்புகளை அகற்ற வேண்டும் என வருவாய் துறையினர் அறிவித்திருந்தனர். இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் வட்டாட்சியர் அலுவலகத்தில் தாசில்தாரை சந்தித்து குடியிருப்புகளை காலி செய்ய கால அவகாசம் கேட்டிருந்தனர். இந்நிலையில் இன்று அப்பகுதிக்கு சென்ற வருவாய் துறையினர் நாளை குடியிருப்புகளை இடமாற்றம் செய்ய வேண்டும் என கூறினர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அப்பகுதி பொதுமக்கள் 100-க்கும் மேற்பட்டோர் பல்லடம், திருப்பூர் பிரதான சாலையில் ராயர் பாளையத்தில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் கிடைத்து சம்பவ இடம் வந்த பல்லடம் காவல் துறையினர், பல்லடம் தாசில்தார் நந்தகோபால் ஆகியோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இடத்தை காலி செய்வதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதுகுறித்து உயர் அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்ததை அடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.