தக்காளி விலை கடுமையாக உயர்ந்து வரும் நிலையில், கோவை குனியமுத்தூர் பகுதியில் நடந்த ஒரு திருமண நிகழ்ச்சியில் மணமக்களுக்கு தக்காளி பரிசளித்த சம்பவம் உறவினர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
கோவை: கடந்த சில தினங்களாக தக்காளி விலை கடுமையாக உயர்ந்து வருகிறது.
உள்ளூரில் போதிய விளைச்சல் இல்லாததால், வெளிமாநிலங்களில் இருந்து தக்காளி கொள்முதல் செய்யப்படுவதால் படிப்படியாக தக்காளி விலை உயர்ந்து தற்போது கோவையில் கிலோ ரூ.95 க்கு தக்காளி விற்பனையாகி வருகிறது. இதனால் குறைவான அளவே பொதுமக்கள் தக்காளி வாங்கி வருகின்றனர்.
உணவு சமைப்பதற்கான காய்கறிகளில் தக்காளியின் பங்கு மிக முக்கியமாக இருப்பதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் கோவை மாவட்ட விஜய் மக்கள் இயக்க தெற்கு நகர இளைஞரணியை சேர்ந்த அக்கீம் மகள் அப்சானா மற்றும் ஹாரீஸ் திருமண நிகழ்ச்சி கோவை குனியமுத்தூர் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட விஜய் மக்கள் இயக்கம் இளைஞரணி நிர்வாகிகள் திடீரென மணமக்களுக்கு தக்காளி பரிசு வழங்கியுள்ளனர்.
மணமக்களுக்கு தக்காளி பரிசாக வழங்கப்பட்ட வீடியோவும் வைரல் ஆகி வருகிறது.
தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையிலும், பரிசு பொருளாக கொடுக்கும் வகையில் விலைவாசி உள்ளது என்பதை உணர்த்தும் வகையிலும் இந்த பரிசை கொடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.