கோவை உக்கடம் பகுதியில் தடை செய்யப்பட்ட 1 டன் குட்கா பொருட்களை பறிமுதல் செய்ததோடு போலீசார் 3 பேரை கைது செய்துள்ளனர்.
கோவை: தமிழகம் முழுவதும் டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவின்பேரில் ஆபரேஷன் 2.0 என்ற பெயரில் கஞ்சா மற்றும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனை மற்றும் கடத்தலை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி கோவை மாவட்டத்தில் தொடர்ந்து குட்கா மற்றும் கஞ்சா பொருட்கள் விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபடுவோரை போலீசார் கைது செய்து வருகின்றனர்.
இந்நிலையில் உக்கடம் லாரி பேட்டை அருகே அதிகாலை 3.30 மணி அளவில் உக்கடம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது லாரி பேட்டைக்கு வந்த லாரி ஒன்றை தடுத்து நிறுத்தி சோதனை செய்தபோது அதில் மூட்டை மூட்டைகளாக குட்கா பொருட்கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து லாரியில் வந்த கரும்பு கடையை சேர்ந்த ஆஷிக் (25), மொய்தீன் (28) மற்றும் காரமடையை சேர்ந்த தேவேந்திரன் (50) ஆகிய 3 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
முதல்கட்ட விசாரணையில் வடமாநிலத்தில் இருந்து கோவையில் சில்லறை விற்பனைக்கு குட்கா பொருட்கள் எடுத்து வந்தது தெரியவந்துள்ளது.
மேலும் இந்த குட்கா பொருட்களின் உரிமையாளர் யார்? எங்கிருந்து குட்கா பொருட்கள் கடத்தி வரப்பட்டது? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.