கோவை, திருப்பூர் உள்ளிட்ட மேற்கு மாவட்டங்களை சேர்ந்த தொழில் துறையினர் பலர் இக்கூட்டத்தில் பங்கேற்று தங்களின் கோரிக்கைகளை முதல்வரிடம் நேரில் தெரிவித்தனர்.
கோவை: தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கோவையில் இன்று தொழில் துறையினருடன் கலந்துரையாடல் கூட்டத்தில் பங்கேற்றார்.
கோவை திருப்பூர் உள்ளிட்ட மேற்கு மாவட்டங்களை சேர்ந்த தொழில் துறையினர் பலர் இக்கூட்டத்தில் பங்கேற்று தங்களின் கோரிக்கைகளை முதல்வரிடம் நேரில் தெரிவித்தனர்.
புகார்களுக்கு தீர்வுக்கான முதலமைச்சர் அளித்த பதில்கள் மற்றும் 'கோவைக்கு அடிக்கடி வருவேன்' 'தொழில் துறையினருடன் கலந்துரையாடுவேன்' என முதல்வர் கூறிச் சென்றது தொழில் துறையினர் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியையும், நம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது.
புதிய நம்பிக்கை!
தென்னிந்திய இன்ஜினியரிங் உற்பத்தியாளர்கள் சங்கத்தின்(SIEMA) தலைவர், கார்த்திக் கூறியதாவது:-

தமிழக முதலமைச்சர் தொழில் துறையினருடன் இன்று நடத்திய கலந்துரையாடல் கூட்டம் மிகவும் சிறப்பாக அமைந்தது. இரண்டரை மணி நேரம் செலவிட்டு தொழில் துறையினரின் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.
உடனடியாக தீர்க்கக்கூடிய பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்கினார். மற்ற கோரிக்கைகள் அனைத்தும் பரிசீலனை செய்து விரைவில் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.
முதல்வரின் இந்த நடவடிக்கையால் தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களில் உள்ள அனைத்து தொழில் நிறுவனங்களும் சிறப்பான வளர்ச்சி பெறும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது." இவ்வாறு அவர் தெரிவித்தார்.
குறுந்தொழில்பேட்டை விரைவில் அமைய வாய்ப்பு
தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோர் சங்கத்தின்(TACT) தலைவர், ஜேம்ஸ் மற்றும் கோவை திருப்பூர் மாவட்ட கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோர் சங்கத்தின்(COTMA) தலைவர், சிவக்குமார் ஆகியோர் கூறியதாவது:-

கோவை மாவட்டத்தில் குறுந்தொழில்களுக்கென தொழிற்பேட்டை அமைக்க வேண்டும் என கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக கோரிக்கை விடுத்து வருகிறோம். இப்பிரச்சினை குறித்து பேசிய முதலமைச்சர் மற்றும் ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் ஆகியோர் குறுந்தொழில் பேட்டை அமைக்க தேவைப்படும் நிலத்தை தேர்ந்தெடுக்க உதவுமாறு கோரிக்கை விடுத்தனர்.
அவ்வாறு செய்யும் பட்சத்தில் விரைவில் அந்த நிலத்தில் குறுந்தொழில் பேட்டை அமைக்க அரசு சார்பில் அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என உறுதியளித்துள்ளார்.
குறுந்தொழில் நிறுவனங்களின் நீண்ட நாள் கோரிக்கையான தாய்கோ( TAICO) வங்கி மூலம் கடன் உதவி வழங்கும் கோரிக்கை குறித்தும் பரிசீலிக்கப்பட்டு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் உறுதியளித்துள்ளார்.
பருத்தி விலை உயர்வு பிரச்சினைக்கு தீர்வு காண மத்திய அரசு கமிட்டி அமைத்துள்ளது அதில் இன்ஜினியரிங் உற்பத்தித் துறையையும் சேர்த்து மூலப்பொருட்கள் பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தினோம். அதற்கும் நடவடிக்கை எடுப்பதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார். மொத்தத்தில் முதல்வருடன் நடந்த கலந்துரையாடல் மிகுந்த நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
தமிழகத்தில் ஆண்டுதோறும் 30 லட்சம் பேல் பருத்தி சாகுபடி செய்ய நடவடிக்கை!
தென்னிந்திய மில்கள் சங்கத்தின்(SIMA) தலைவர், ரவிசாம் மற்றும் இந்திய ஜவுளி தொழில் கூட்டமைப்பின்(CITI), தலைவர் ராஜ்குமார் ஆகியோர் கூறியதாவது:-

பருத்தி விலை உயர்வு பிரச்சினைக்கு தீர்வு காண உதவும் வகையில் மத்திய அரசிடம் வலியுறுத்தி பஞ்சு இறக்குமதி வரியை 11% நீக்க உதவியதால் ஜவுளித் தொழில் துறையினருக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் தற்போது ஆண்டுக்கு 5 முதல் 7 லட்சம் பருத்தி மட்டுமே சாகுபடி செய்யப்படுகிறது. பருத்தி சாகுபடி நிலப்பரப்பு அதிகரித்து ஆண்டுக்கு 30 லட்சம் பேல் பருத்தி சாகுபடி செய்ய உதவும் வகையில் தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள உள்ளது.
காட்டன் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா போன்று தமிழகத்தில் தமிழ்நாடு காட்டன் கார்ப்பரேஷன் என்ற அமைப்பை துவக்கி பஞ்சு கொள்முதல் செய்து நேரடியாக குறு மற்றும் சிறு மில்களுக்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார்.
பஞ்சு இறக்குமதி வரி செப்டம்பர் இறுதிவரை நீக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் புக்கிங் செய்த பஞ்சு இந்தியா வர இரண்டு மாதங்கள் ஆகும் எனவே இந்த திட்டத்ததை செப்டம்பர் 30 வரை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய புக்கிங் செய்யப்பட்ட பஞ்சு அனைத்துக்கும் இந்த வரி விலக்கு கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தோம் இதற்கு முதல்வர் உதவுவதாக தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஜவுளி தொழில் வளர்ச்சியில் தமிழக முதல்வர் கொண்டுள்ள அக்கறை மிகவும் பாராட்டுக்குரியது.
நூல் வங்கி அமைக்க உதவி
திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின்(TEA), தலைவர், ராஜா எம் சண்முகம் கூறியதாவது:-

பின்னலாடை நிறுவனங்கள் கைத்தறி மற்றும் விசைத்தறி நிறுவனங்கள் மூன்று மாதங்களுக்கு தேவையான நூல் இருப்பு வைத்துக் கொள்ளும் வகையில் நூல் வங்கி( Yarn Bank)அமைக்க உதவும் வகையில் நடப்பு மூலதனத்தில் 5 சதவீத வட்டி மானியம் வழங்கவும் மற்றும் நூல் ஏற்றுமதியை முறைப்படுத்தவும் பருத்தி ஏற்றுமதிக்கு தடை விதிக்க மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு மருத்துவம் மற்றும் ஹோட்டல் துறைக்கு 50 சதவீத அவசரகால கடன் உறுதி திட்டத்தின் கீழ் நிதியுதவி வழங்கியுள்ளது. பின்னலாடை நிறுவனங்களுக்கு 30 சதவீதம் மட்டுமே கடன் உதவி வழங்கப்பட்டுள்ளது. மேற்குறிப்பிட்ட இரு துறைகளைப் போன்று இத்துறைக்கும் கூடுதலாக 20 சதவீத அவசரகால கடன் உதவி திட்டத்தை நீட்டித்து நிதி உதவி வழங்க நடவடிக்கை எடுக்க மத்திய அரசுக்கு பரிந்துரைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளோம். அதற்கு தமிழக முதலமைச்சர் உதவுவதாக தெரிவித்துள்ளார்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.