தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று முதல் வருகிற 22-ந் தேதி வரை 5 நாட்கள் கோவை மற்றும் நீலகிரி மாவட்டத்தில் நடக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ள நிலையில், சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று கோவை வந்தடைந்தார்.
கோவை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று முதல் வருகிற 22-ந் தேதி வரை 5 நாட்கள் கோவை மற்றும் நீலகிரி மாவட்டத்தில் நடக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ள நிலையில், சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று கோவை வந்தடைந்தார்.
கோவை வந்த முதல்வருக்கு திமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
கோவையில் தங்கும் முதல்வர் நாளை காலை 9.30 மணிக்கு வ.உ.சி மைதானத்தில் “பொருநை” அகழ்வு ஆராய்ச்சி மற்றும் தமிழக அரசின் ஓராண்டு சாதனை விளக்க கண்காட்சியை திறந்து வைத்து பார்வையிடுகிறார்.
பின்னர் காலை 10 மணிக்கு அவினாசி சாலையில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் தொழில் முனைவோர்களுடன் முதலமைச்சர் கலந்துரையாடுகிறார்.
பின்னர், சாலை மார்கமாக ஊட்டிக்கு செல்லும் முதல்வர், மேட்டுப்பாளையத்தில் மதிய உணவு முடித்துக் கொண்டு, உதகை புறப்படுவார்.
பின்னர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை இரவு ஊட்டி அரசு விருந்தினர் மாளிகையில் தங்குகிறார். நாளை மறுநாள் (மே 20) தேதி காலை ஊட்டி தாவரவியல் பூங்காவில் நடக்கும் மலர் கண்காட்சியை தொடங்கி வைத்து, கண்காட்சியை பார்வையிடுகிறார். பின்னர், மே 21 ஊட்டி 200 ஆவது ஆண்டு விழா மற்றும் அரசு நலத்திட்டங்கள் வழங்கும் விழாவில் பங்கேற்கிறார்.
அதனை தொடர்ந்து ஓய்வெடுக்கும் முதல்வர் முக.ஸ்டாலின், மே.22 கோவை விமான நிலையம் வந்து சென்னை செல்லவுள்ளார். இதனிடையே, கோவையில் கட்டி முடிக்கப்பட்ட கவுண்டம்பாளையம் மற்றும் சுங்கம் மேம்பாலங்களை திறந்து வைக்க வாய்ப்பு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முதல்வர் வருகையையொட்டி, கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் மொத்தம் 4 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.