ஒரு பொருள் உற்பத்தி செய்ய தேவைப்படும் உதிரி பாகங்களை ஜாப் ஒர்க் செய்து தரும் குறுந்தொழில் நிறுவனங்களுக்கு வழங்கப்படும் கட்டணம் கடந்த 15 ஆண்டுகளாக மாறாமல் இருப்பது குறுந்தொழில் நிறுவனந்தினரை கடுமையாக பாதிப்பதாக கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோர் தலைவர் சிவக்குமார் கூறியுள்ளார்.
கோவை: தொழில் நகரான கோவை டெக்ஸ்டைல், ஆட்டோமொபைல் உதிரி பாகங்கள், காஸ்டிங், வெட் கிரைண்டர், மோட்டார் பம்ப் செட், இன்ஜினியரிங் பொருட்கள் என்பது உள்ளிட்ட பல்வேறு தொழில்களில் தேசிய அளவில் மட்டுமின்றி உலக அளவில் புகழ் பெற்று விளங்குகிறது.
ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்ட பதிவு செய்த தொழில் நிறுவனங்களும், 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குறுந்தொழில் நிறுவனங்கள் கோவை மாவட்டத்தில் செயல்பட்டு வருகின்றன.
உற்பத்தி சார்ந்த தொழில் நிறுவனங்களில் 8 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். கோவை தொழில் வளர்ச்சியில் குறுந்தொழில் நிறுவனங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இத்தகைய தொழில் நிறுவனங்களில் ஜாப் ஒர்க் செய்யும் பணிக்கு கட்டணம் கடந்த 15 ஆண்டுகளாக மாற்றப்படவில்லை. இதனால் குறுந்தொழில் முனைவோர் கடுமையான நிதி நெருக்கடியை சந்திக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
கோவை திருப்பூர் மாவட்ட கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோர் சங்கத்தின்(COTMA) தலைவர், சிவக்குமார் கூறியதாவது:-
உற்பத்தி துறையின் கீழ் கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் செயல்பட்டு வரும் குறுந்தொழில் நிறுவனங்கள் மோட்டார் பம்ப் செட், வெட் கிரைண்டர் என்பது உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் உற்பத்திக்கு தேவைப்படும் உதிரி பாகங்களை தயாரித்து வருகின்றன. பெரும்பாலான நிறுவனங்கள் மூலப் பொருட்களை நேரடியாக கொள்முதல் செய்வதும் இல்லை, பொருட்களை விற்பனை செய்வதும் இல்லை. பெரிய நிறுவனங்கள் உற்பத்திக்கு தேவையான உதிரி பாகங்களை ஜாப் ஒர்க் மட்டுமே குறுந்தொழில் நிறுவனங்கள் செய்து கொடுக்கின்றன.
இதற்கு தேவைப்படும் மூலப் பொருட்களும் பெரிய நிறுவனங்களே வழங்கிவிடும். அதேபோல் குறுந்தொழில் நிறுவனங்கள் ஜாப் ஒர்க் செய்து வழங்கும் பொருட்களையும் பெரிய நிறுவனங்களே விற்பனை செய்யும். இவ்வாறு ஒரு பொருள் உற்பத்தி செய்ய தேவைப்படும் உதிரி பாகங்களை ஜாப் ஒர்க் செய்து தரும் குறுந்தொழில் நிறுவனங்களுக்கு வழங்கப்படும் கட்டணம் கடந்த 15 ஆண்டுகளாக மாறாமல் உள்ளது.
கடந்த 15 ஆண்டுகளாக குறுந்தொழில் நிறுவனங்கள் இயங்கி வரும் கட்டடங்களின் வாடகை மற்றும் மின் கட்டணம் பல மடங்கு அதிகரித்துள்ளது. பெட்ரோல் டீசல் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது.
ஊழியர்களுக்கான ஊதியமும் அதிகரித்துள்ளது. பெட்ரோல் டீசல் விலை உயர்வு காரணமாக போக்குவரத்து செலவு பல மடங்கு அதிகரித்துள்ளது.
இவை எல்லாவற்றுக்கும் மேல் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் ஒப்பிடுகையில் தற்போது விலைவாசியை கடுமையாக உயர்ந்துள்ளது. இத்தகைய சூழ்நிலையில் குறுந்தொழில் நிறுவனங்கள் ஜாப் வொர்க் செய்வதற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணம் மட்டும் 15 ஆண்டுகளாக மாறாமல் உள்ளது குறிப்பிடத்தக்கது.
பல்வேறு துறைகளில் எண்ணற்ற மாற்றங்கள் நிகழ்ந்து வரும் போதிலும் ஜாப் வொர்க் கட்டணம் மாறாமல் இருப்பது குறுந்தொழில் முனைவோருக்கு நிதி நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. எனவே குறுந்தொழில் நிறுவனங்களின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு ஜாப் ஒர்க் செய்யும் பணிக்கு வழங்கும் கட்டணத்தை அதிகரிக்க பெரிய நிறுவனங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுவே இப்பிரச்சினைக்கு தீர்வாக அமையும்.
இவ்வாறு அவர் கூறினார்.