இன்று மதியம் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருக்கும் போது பலத்த இடி மின்னலுடன் மழை பொழிந்ததால், அவர் மரத்தின் அடியில் ஓதுங்கியுள்ளார். அப்போது மின்னல் தாக்கியதில் அவர் உயிரிழந்தார்.
கோவை: கோவை தடாகம் சாலை சோமையனூர் பகுதியை சேர்ந்தவர் ரங்கராஜ் (56). இவர் பாப்பநாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில் வேலை செய்து வருகிறார்.
இந்நிலையில், இன்று மதியம் அங்கு வேலை செய்து கொண்டிருக்கும் போது பலத்த இடி மின்னலுடன் மழை பொழிந்ததால், அவர் மரத்தின் அடியில் ஓதுங்கியுள்ளார்.
அப்போது, எதிர்பாராத விதமாக மின்னல் தாக்கியதில், ரங்கராஜ் நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார். உடனடியாக, அங்கிருந்தவர்கள் அவருக்கு தண்ணீர் கொடுத்து முதலுதவி செய்து அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால், மருத்துவமனையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து தடாகம் காவல் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அதே சமயம், ரங்கராஜ் அருகே நின்று கொண்டிருந்த வீரன் என்பவரையும் மின்னல் தாக்கியதில், அவருக்கு கையில் சிறிது காயங்கள் மட்டுமே ஏற்பட்ட நிலையில் அவர் உயிர் தப்பினார்.
கோவையில் பட்டப்பகலில் மின்னல் தாக்கி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பொதுமக்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.