கோவையில் சிறுமியை கடத்திச் சென்று திருமணம் செய்த வடமாநில இளைஞரை போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.
கோவை: 15 வயது சிறுமியை கடத்தி திருமணம் செய்த வாலிபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே செயல்பட்டு வரும் தனியார் மில் ஒன்றில் மேற்கு வங்காளத்தை சேர்ந்த ராகுல் தாஸ் என்பவர் தங்கி வேலை செய்து வந்துள்ளார். அதே மில்லில் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த பெற்றோர்கள் தனது 15-வயது மகளுடன் தங்கி வேலை செய்து வந்துள்ளனர்.
அந்த சிறுமியுடன் ராகுல் தாசுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இந்நிலையில் இந்த சம்பவம் சிறுமியின் பெற்றோருக்கு தெரியவந்துள்ளது.
சிறுமியின் பெற்றோர்கள் சிறுமியை கண்டித்திருக்கிறார்கள். இதனை அறிந்த ராகுல், தான் சிறுமியிடம் திருமணம் செய்வதாக கூறி மேற்கு வங்காளத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார். அழைத்துச் சென்று கடந்த மூன்று மாதங்களாக வசித்து வந்துள்ளார்.
இதனிடையே கடந்த ஜனவரி மாதம் சிறுமியின் பெற்றோர் கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளனர். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த கருமத்தம்பட்டி காவல் துறையினர், மேற்கு வங்காளத்தில் இருந்த ராகுல் தாஸ் மற்றும் சிறுமியை கருமத்தம்பட்டி காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு, பின்னர் ராகுல் தாஸ் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.