வேளாண் துறை சார்பில் என்னென்ன திட்டங்கள் மதுக்கரை வேளாண் வட்ட கிராமங்களில் செயல்படுத்தப்பட்டுள்ளது என்பது குறித்தும் வேளாண் துறை அதிகாரிகளிடம், ஆட்சியர் கேட்டறிந்தார்.
கோவை: மே 1 தொழிலாளர் தினத்தை முன்னிட்டு மதுக்கரை ஒன்றியம் மாவுதம்பதி ஊராட்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சிறப்பு கிராம சபை கூட்டத்தில் கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ். சமீரன் பார்வையாளராக கலந்துக் கொண்டார்.
அப்போது அங்கு வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை சார்பாக கருத்து காட்சி வைக்கப்பட்டது. அதில், மதுக்கரை வட்டத்தில் உள்ள சிறு குறு விவசாயிகளுக்கு தமிழக அரசால் மானிய விலையில் வழங்கப்படும் களை எடுக்கும் கருவிகள், மண்வெட்டி, கடப்பாரை, அரிவாள் உள்ளிட்ட வேளாண் பொருட்கள் வைக்கப்பட்டு இருந்தது. அதை பார்வையிட்ட, மாவட்ட ஆட்சியர் அங்கு வந்த விவசாயிகளிடம் முழுமையாக வேளாண் திட்டங்கள் விவசாயிகளுக்கு சென்றடைகிறதா..? என வினவினார்.
மேலும், வேளாண் துறை சார்பில் என்னென்ன திட்டங்கள் மதுக்கரை வேளாண் வட்ட கிராமங்களில் செயல்படுத்தப்பட்டுள்ளது என்பது குறித்தும் வேளாண் துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். இதையடுத்து, சுற்றுவட்டார கிராமத்தை சேர்ந்த சுமார் 100க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு கிஷான் கடன் அட்டை பெற விண்ணப்பங்கள் பெறப்பட்டு, விண்ணப்பங்கள் வங்கிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அந்த அட்டைகள் வந்தபிறகு விவசாயிகளுக்கு வழங்கப்படும் என வேளாண் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிகழ்ச்சியில், வேளாண் துறை இணை இயக்குனர் சித்ராதேவி, துணை இயக்குனர் தமிழ்ச்செல்வி மற்றும் உதவி வேளாண் இயக்குனர் ரத்தினம் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துக் கொண்டனர்.