தொடரும் காட்டு யானைகள் உயிரிழப்பு தொடர்பாக, வனம் மற்றும் வன உயிரினங்களை பாதுகாக்க வேண்டிய அவசியம், காடுகளுக்கு யானை எவ்வளவு முக்கியமானது என்பது குறித்து மாணவர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.
கோவை: கோவையில் தொடர் யானைகள் உயிரிழப்பு எதிரொலியாக, கல்லூரி மாணவர்களுக்கு வனம் மற்றும் காட்டு யானைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.
கோவையில் சமீபகாலமாக காட்டு யானைகள் உயிரிழக்கும் நிகழ்வுகள் தொடர்ந்து வரும், நிலையில் தமிழகம் முழுவதும் இயற்கை மற்றும் இயற்கைக்கு முரணாக யானைகள் உயிரிழக்கும் சம்பவங்களை ஆய்வு செய்ய 3 ஐ.எஃப்.எஸ் அதிகாரிகள் மற்றும் ஒரு சமூக ஆர்வலர் அடங்கிய சிறப்பு குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது.
இந்த குழு தமிழகம் முழுவதும் இயற்கை மற்றும் இயற்கைக்கு முரணாக முறையில் உயிரிழப்புகள் குறித்து சம்பவ இடத்தில் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு அறிக்கையை தயார் செய்ய உள்ளனர்.
மேலும் இந்த குழு அண்மையில் கோவை மாவட்ட வன அலுவலகத்தில் சிறப்பு ஆலோசனைக் கூட்டம் ஒன்றை நடத்தியது, இதில் விவசாயிகள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் கலந்து கொண்டனர்.
அப்போது கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து வனச்சரகத்திற்கும் ஒவ்வொரு தன்னார்வ அமைப்புகள் மற்றும் வனத்துறையினர் இணைந்து வனம் மற்றும் காட்டுயானைகள் குறித்தான விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்த அறிவுறுத்தினர்.
அதன் முதல் துவக்கமாக கோவை மதுக்கரை வனச்சரகத்தில் உட்பட்ட சோல கரை வனப்பகுதியில் கல்லூரி மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் வனம் மற்றும் வன உயிரினங்களை பாதுகாக்க வேண்டிய அவசியம், காடுகளுக்கு யானை எவ்வளவு முக்கியமானது, வனத்தில் யானைகளின் பங்களிப்பு என்ன?, வனப்பகுதியில் வன ஊழியர்களின் பணிகள் என்ன என்பது குறித்து மாணவர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.
குறிப்பாக வனப்பகுதியில் வன ஊழியர்கள் மேற்கொள்ளும் பணிகள், அண்மையில் நடந்த யானை உயிரிழப்பு மற்றும் யானைகளுக்கு சிகிச்சை அளிப்பது, அதேபோல் வனப்பகுதியில் இருந்து ஊருக்குள் வரும் வனவிலங்குகளை மீண்டும் வனப்பகுதிக்குள் அனுப்பும் பணி ஆகியவை பற்றி மதுக்கரை ரேஞ்சர் சந்தியா விளக்கமளித்தார்.
அதனைத்தொடர்ந்து இயற்கை பாதுகாப்பு சங்கம் நிறுவனர் ஜலாலுதீன் கூறும் போது:-
வன உயிரினங்களின் முக்கியத்துவம், காட்டு யானைகளின் பங்களிப்பு ஆகியவற்றைக் குறித்து விளக்கினார். மேலும் மாணவர்கள் இந்த விழிப்புணர்வை அனைத்து பகுதிகளுக்கும் கொண்டு செல்ல வேண்டும் என தெரிவித்தார்.
இதேபோல் கோவை மாவட்டம் முழுவதும் வாரம் ஒரு முறை கோவையில் உள்ள கல்லூரி மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்த உள்ளனர்.