உயிரிழந்த பெண் யானை மற்றும் சிசுவிற்கு இன்று கால்நடை மருத்துவர்கள் உடற்கூறு ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்.
கோவை: கோவை வனப்பகுதியில் தொடர்ந்து காட்டு யானைகள் உடல்நலக் குறைவாலும், இயற்கைக்கு முரணான முறையிலும் உயிர் இழந்து வருகிறது.
கடந்த 100-நாட்களில் சுமார் 14-யானைகள் உயிரிழந்துள்ளது. இந்நிலையில், நேற்று மாலை கோவை சிறுமுகை வனச்சரகத்திற்கு உட்பட்ட மூதூர் பெத்திகுட்டை, இரட்டை கண் பாலம் அருகே வனத்துறையினர் ரோந்து சென்றனர். அப்போது வன எல்லையில் சுமார் 30 மீட்டர் தொலைவில் உள்ள பவானிசாகர் அணை நீர் தேக்க பகுதியில் இளம் பெண் யானை கருச்சிதைவு ஏற்பட்ட நிலையில் சிசுவுடன் இறந்து கிடந்துள்ளது.
இதைக்கண்ட வனத்துறை ஊழியர்கள் உடனடியாக உயர் அதிகாரிகள் மற்றும் மாவட்ட கால்நடை மருத்துவ அலுவலருக்கு தகவல் அளித்தனர். உயிரிழந்த பெண் யானை மற்றும் சிசுவிற்கு இன்று கால்நடை மருத்துவர்கள் உடற்கூறு ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்.
அதன்பின்னரே யானை இறப்புக்கான காரணம் தெரியவரும். தொடர்ந்து காட்டு யானைகள் உயிரிழந்து வந்த நிலையில், சிசுவுடன் பெண்யானை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.