வெள்ளலூர் குப்பை கிடங்கில் நீண்ட நாட்களாக தேங்கி உள்ள குப்பைகளை திடக்கழிவு மேலாண்மை மூலம் உரங்களாக மாற்றும் பணி நடைபெற்று வரும் நிலையில் மேயர் ஆய்வு மேற்கொண்டார்.
கோவை: கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார், துணை மேயர் வெற்றிச்செல்வன் உள்ளிட்டோர் இன்று காலை கோவை வெள்ளலூர் குப்பை கிடங்கில் ஆய்வு மேற்கொண்டனர்.
கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் வெள்ளலூர் குப்பை கிடங்கில் கொட்டப்பட்டு தரம் பிரிக்கப்பட்டு வருகிறது. மண்டல வாரியாக குப்பை தரம் பிரிக்கும் மையங்களை அமைக்க மாநகராட்சி முடிவு செய்திருந்தாலும் இப்போது வரை வெள்ளலூர் கிடங்கில் கொட்டப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார், துணை மேயர் வெற்றிச்செல்வன் உள்ளிட்டோர் இன்று காலை கோவை வெள்ளலூர் குப்பை கிடங்கில் ஆய்வு மேற்கொண்டனர். மேலும் அங்கு தரம் பிரிக்கும் பணி மற்றும் திடக்கழிவு மேலாண்மை பணிகளை ஆய்வு மேற்கொண்டனர்.
மேலும் வெள்ளலூர் குப்பை கிடங்கில் நீண்ட நாட்களாக தேங்கி உள்ள குப்பைகளை திடக்கழிவு மேலாண்மை மூலம் உரங்களாக மாற்றும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. அந்த பணிகளையும் மேயர்கள் கல்பனா ஆய்வு மேற்கொண்டார்.
இதைத் தொடர்ந்து உலக புவி தினத்தை முன்னிட்டு வெள்ளலூர் குப்பை கிடங்கில் 16 ஏக்கர் பரப்பளவில் மரக்கன்றுகளை நடவு செய்யும் பணிகளையும் தொடங்கி வைத்தார்.
முதல் கட்டமாக 50 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்ட நிலையில், தினமும் இந்த பணிகள் நடைபெற உள்ளது. மேலும் வெள்ளலூர் குப்பை கிடங்கை சுற்றியுள்ள பகுதிகளில் அதிக அளவு துர்நாற்றம் வீசுவதால், சுமார் 16 ஏக்கர் பரப்பளவில் மரங்களை நடவு செய்யும் போது, தூய்மையான காற்று உருவாகும் என்பதால் இந்த முயற்சி மேற்கொண்டுள்ளனர்.
அதே போல கிடங்கில் உள்ள குப்பைகள் அனைத்தும் வேகமாக அப்புறப்படுத்தி, உரமாக பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.