3-ஆம் வகுப்பு படிக்கும் சிறுவனை கழிவறையை சுத்தம் செய்ய வைத்த பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் உதவி தலைமை ஆசிரியர் மீது குழந்தை வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட இரண்டு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கோவை: கோவை செம்மேடு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் 3 ஆம் வகுப்பு படிக்கும் சிறுவனைக் கழிவறையைச் சுத்தம் செய்ய வைத்த விவகாரத்தில் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும்உதவி தலைமை ஆசிரியர் மீது குழந்தை வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட இரண்டு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை செம்மேடு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் படிக்கும் 3-ஆம் வகுப்பு சிறுவனைக் கடந்த மார்ச் 29 ஆம் தேதி, கழிவறையைச் சுத்தம் செய்ய வைத்தாகவும், கேட்கச் சென்ற மாணவனின் தாயைப் பார்த்து அறுவெறுப்பாக இருப்பதாக ஆசிரியர்கள் கூறியதாகச் சிறுவனின் தாயார் ஆலாந்துறை போலீசில் புகார் அளித்தார்.
இதையடுத்து சம்பவம் தொடர்பாக மாவட்ட கூடுதல் துணை காவல் கண்காணிப்பாளர், பேரூர் சரக துணை காவல் கண்காணிப்பாளர், ஆலாந்துறை காவல் ஆய்வாளர் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரிகள் செம்மேடு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளிக்குச் சென்று பள்ளி குழந்தைகளிடம் விசாரணை மேற்கொண்டனர்.

பள்ளிச் சிறுவனைக் கழிவறையைச் சுத்தம் செய்ய வைத்ததோடு, மாணவனின் தாயை மரியாதைக் குறைவாக நடத்திய அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜெயந்தி, உதவி தலைமை ஆசிரியர் தங்க மாரியம்மாள் ஆகிய இருவர் மீதும் sc/st வன்கொடுமை தடுப்பு மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்டம் ஆகிய இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.