அத்திரைப்படம் இந்து பண்டிட்டுகளை இஸ்லாமியர் துன்புறுத்துவதாக மக்களிடையே பிரிவினை வாதத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளதாக எதிர்ப்பு.
கோவை: கோவை, வடகோவை பகுதியில் உள்ள புரூக்பீல்ட் மாலில் காஷ்மீர் பைல்ஸ் திரைப்படம் திரையிட்ட திரையரங்கத்தை எஸ்டிபிஐ கட்சியினர் முற்றுகையிட முயன்றபோது காவல்துறையினர் அவர்களை கைது செய்தனர்.
அத்திரைப்படம் இந்து பண்டிட்டுகளை இஸ்லாமியர் துன்புறுத்துவதாக சித்தரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்தது.
இப்படத்தைக் கண்டித்து இஸ்லாமிய இயக்கங்கள், மக்களிடையே பிரிவினை வாதத்தை ஏற்படுத்தும் வகையில் இத்திரைப்படம் உள்ளதால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில், இன்று கோவை வடகோவை பகுதியில் உள்ள புரூக்பீல்ட்மாலில் உள்ள திரை அரங்கத்தில் காஷ்மீர் பைல்ஸ் படம் திரையிடுவதை தடை செய்ய வலியுறுத்தி கோவை மாவட்ட எஸ்டிபிஐ கட்சி மாவட்டச் செயலாளர் உசேன் தலைமையில் நூற்றுக்கு மேற்பட்டோர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, காஷ்மீர் பைல்ஸ் திரைப்படத்தை திரையிட தடை விதிக்க வேண்டி வலியுறுத்தி கோஷமிட்டனர். அசம்பாவிதத்தை தடுக்கும் வகையில் நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டு இருந்தனர்.

இந்த முற்றுகைப் போராட்டத்தில் எஸ்டிபிஐ கட்சி மாவட்ட தலைவர் முஸ்தபா, பொதுச் செயலாளர்கள் அப்துல் காதர், முகமது இசாக், பொருளாளர் இக்பால், துணைத் தலைவர் சிவக்குமார், ஷாநவாஸ், எஸ்டிபிஐ கட்சி செய்தி தொடர்பாளர் மன்சூர் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இவர்களை காவல்துறை கைது செய்து தனியார் மண்டபத்திற்கு அழைத்துச் சென்றனர்.
மேலும், "காஷ்மீர் பைல்ஸ்" திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் மற்றும் நடிகர்களை அழைத்து பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.