கருமத்தம்பட்டி அருகில் உள்ள கிராமத்தில் விளை நிலங்களில் அமைக்கப்படும் உயர்மின் கோபுரங்களுக்கு நியாயமான இழப்பீடு தொகை வழங்காததை கண்டித்து, மின்கோபுரங்கள் மீது ஏறி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை: கருமத்தம்பட்டி அருகே உயர்மின் கோபுரத்தின் மீது ஏறி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை மாவட்டம், கருமத்தம்பட்டி அருகில் உள்ள எலச்சிபாளையம் கிராமத்திலிருந்து ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஈங்கூர் பகுதி வரை உயர் மின்னழுத்த கோபுரங்கள் அமைக்கப்பட்டு வருகிறது.
இதில் 70 சதவீத பணிகள் மட்டுமே நிறைவடைந்துள்ளன. உயர் மின் கோபுரங்கள் விவசாயிகள் நிலத்தில் செல்வதால் அவர்களுக்கு இழப்பீடு தருவதாக மின்சார வாரியம் விலை நிர்ணயத்தைச் செய்துள்ளது. ஆனால் இதுவரை இழப்பீட்டு தொகை விவசாயிகளுக்குக் கொடுக்கவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில், எலச்சிபாளையத்தில் விவசாயி ஒருவரது நிலத்தில் புதிதாக உயர்மின் கோபுரத்தை அமைக்க மின்சார வாரியம் முடிவு செய்து போலீஸ் பாதுகாப்புடன் அமைக்க முற்பட்ட போது அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி விவசாயிகள் உயர் மின் கோபுரம் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த சூலூர் வட்டாட்சியர் மற்றும் மின்வாரியத் துறை அதிகாரிகள் விவசாயிகளிடம் பேசி உரிய இழப்பீட்டுத் தொகையை உடனடியாக பெற்றுத் தருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதால் விவசாயிகள் போராட்டம் கைவிடப்பட்டது.