மேலும், 7 வயது சிறுமி உடலில் கம்பி குத்திய காயங்களுடன் ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை.
கோவை: கோவை தொண்டாமுத்தூர் அருகே கட்டிட அதிஸ்வார சுவர் இடிந்து விழுந்த விபத்தில் 4 வயது சிறுமி பலி மற்றும் 7வயது சிறுமி ஆபத்தான நிலையில் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
கோவை தொண்டாமுத்தூரை சேர்ந்தவர் பாபு (49). இவருக்கு சொந்தமான 6 சென்ட் நிலத்தில் வீடு கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிகளில் தடாகம் பகுதியை சேர்ந்த சின்னத்தம்பி, அவரது மனைவி ஜோதி, பவித்ரா, முல்லை ஆகிய 4 பேர் ஈடுபட்டிருந்தனர்.
மேலும், அந்த நிலம் பள்ளத்தில் இருந்ததால் 4 அடி உயரத்திற்கு மேல் அஸ்திவாரம் போடப்பட்டு, அதற்குமேல் கட்டிடம் கட்டும் பணி நடந்து வருகிறது.

இந்நிலையில், கட்டிட பணி நடந்தபோது அஸ்திவாரம் அருகே குழி தோண்டும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டதாக தெரிகிறது. அப்போது அதன் அருகே கட்டுமான பணியில் ஈடுபட்ட பணியாளரின் உறவினரான தங்கராஜ் என்பவரின் மகள் சன்சிகா (4) மற்றும் சந்துரு என்பவரின் மகள் தேவசேனா (7) ஆகியோர் விளையாடிக் கொண்டிருந்தனர்.

அப்போது, திடீரென அஸ்திவாரத்தின் ஒரு பகுதி சுவர் இடிந்து விழுந்தது. இதில் சன்சிகா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தேவசேனா கம்பி குத்திய காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் தொண்டாமுத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
ஆனால், உடல் நிலை மோசமாக இருந்ததால் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இச்சம்பவம் தொடர்பாக தொண்டாமுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.