உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் ரத்தவெள்ளத்தில் கிடப்பது போன்ற காட்சிகள் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை: பொள்ளாச்சி அருகே உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் தனியார் பேருந்து மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் ஒருவர் பலியான வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது.

பொள்ளாச்சி அருகே உள்ள நெகமம் வெள்ளாளபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் அய்யாசாமி (45) இவர் முட்டைகளை பாதுகாக்கும் அட்டைகள் தயாரிக்கும் தொழில் செய்து வருகிறார்.
இவர் வியாபாரம் சம்பந்தமாக பொள்ளாச்சியிலிருந்து உடுமலை நோக்கி இரு சக்கர வாகனத்தில் நேற்று சென்று கொண்டு இருந்தார்.

அப்போது நல்லம்பள்ளி பிரிவு அருகே சென்ற போது பழனியில் இருந்து பொள்ளாச்சி நோக்கி வந்த தனியார் பேருந்து மீது மோதி தூக்கி வீசப்பட்ட அய்யாசாமி தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

சம்பவ இடத்துக்கு விரைந்த கோமங்கலம் காவல் நிலைய போலீசார் இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும், பேருந்து ஓட்டுனர் செந்தில் குமாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், பேருந்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் விபத்து நடந்தது பதிவாகியுள்ளது. பதபதைக்க வைக்கும் வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
விபத்துக்குள்ளான பேருந்து உடுமலை சாலையில் பொள்ளாச்சி நோக்கி வந்து கொண்டிருந்தது.

இருசக்கர வாகனத்தில் எதிரே வந்து கொண்டிருந்த அய்யாசாமி நிலைதடுமாறி பேருந்து மீது மோதி தூக்கி வீசப்பட்டு ரத்தவெள்ளத்தில் கிடப்பது போன்ற காட்சிகள் அதில் பதிவாகியுள்ளதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.